மதுபோதையில் கத்தியால் குத்த வந்த அண்ணன் கொலை: பட்டதாரி இளைஞர் கைது!

October 10, 2024 at 9:32 am
pc

வேலூர் மாநகர் சலவன்பேட்டை கச்சேரி தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி. சண்முகம் வேலூர் பஜாரில் புகைப்பட கடை வைத்துள்ளார். இவர்களுக்கு மோகன் (வயது 30), பாஸ்கர் (வயது 25) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மோகனுக்குத் திருமணம் திவ்யபாரதி (29) என்பவருடன் திருமணம் ஆன நிலையில் இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இளைய மகன் பாஸ்கருக்குத் திருமணம் ஆகவில்லை எம்எஸ்சி முடித்த இவர் பெங்களூருவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வீட்டில் இருந்தவாறு பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் மோகன் எந்த வேலைக்கும் செல்லாமல் அடிக்கடி மது போதையில் வந்து தகராறில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படி வீட்டிற்கு மது போதையில் வந்த மோகன் தாய் மற்றும் மனைவியைத் தாக்கி தகராற்றில் ஈடுபட்டுள்ளார். இதனைத் தடுக்க சென்ற தம்பி பாஸ்கரைக் கத்தியால் குத்த வந்துள்ளார். தான் கத்தியால் குத்து வருவதை அறிந்த பாஸ்கர் அதனைத் தடுத்து ஆத்திரத்தில் அண்ணன் மோகனை புடவை மற்றும் கயிற்றால் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் தெற்கு காவல் துறையினர் உயிரிழந்து கிடந்த மோகனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அண்ணனைக் கொலை செய்த பட்டதாரி இளைஞர் பாஸ்கரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website