தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதியா?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக போவதாக தகவல் பரவிய நிலையில், அவரே விளக்கம் அளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் நடந்த திமுக இளைஞரணியின் 45-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு மாநில இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்தார்.
அப்போது விழாவில் பேசிய அவர், “நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 40க்கு 40 வெற்றியை கொடுத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.
திமுகவுக்கு பெண்களிடையே ஆதரவு அதிகரித்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டம், விடியல் பயணத் திட்டம் ஆகியவை பெண்களிடையே ஆதரவை பெற்றுள்ளன.
திமுகவில் எத்தனை அணிகள் இருந்தாலும் இளைஞரணி தான் முதன்மையானது. நான் துணை முதலமைச்சராக போவதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் தான்.
அனைத்து அமைச்சர்களும் முதலமைச்சருக்கு துணையாக தான் இருப்போம். எனக்கு எவ்வளவு பொறுப்புகள் வந்தாலும் தனது மனதிற்கு மிக நெருக்கமான ஒரு பொறுப்பு இளைஞரணி செயலாளர் பொறுப்பு தான்” என்றார்.