தமிழ்நாட்டில் கொரோனா சோதனை மையங்கள் அதிகரிப்பு!

March 22, 2020 at 3:53 am
pc

இந்தியாவில் 258 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

மகராஷ்டிராவில் 52 பேருக்கும் கேரளாவில் 40 பேருக்கும் உத்தரபிரதேசத்தில் 24 பேருக்கும் கொரோனா தொற்று உள்ளது. தமிழ்நாட்டில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இந்த மூன்று பேருடன் தொடர்பில் இருந்த 84 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கும் சோதனை நடைபெற்று வருகிறது.

கொரோனா அறிகுறிகளுடன் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களது ரத்த மாதிரிகள் சென்னை கிங்ஸ் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டு வந்தன. திருநெல்வேலி, தேனி, திருவாரூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா ஒரு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சேலத்தில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது மேலும் இரு இடங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையை பொறுத்தவரை தினமும் சுமார் 150 பேர் கொரோனா சோதனைக்காக வருகை தருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களின் ரத்த மாதிரிகள் அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்படுவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக இந்த சோதனை மையங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website