அறந்தாங்கியில் 7 வயது சிறுமி கொடூர கொலை – கைதான ராஜா போலீசிடம் இருந்து தப்பி ஓட்டம்…!!!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பல் மேலகுடியிருப்பு கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமியின் சடலம், கடந்த 1-ம் தேதி கிளவிதம்மம் ஊரணியில் இறந்த நிலையில் தலை மற்றும் கை பகுதியில் காயங்களுடன் கண்டறியப்பட்டது.
சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்துக்கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி சிறுமியின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பூ கட்டும் தொழிலாளி ராஜா (27) என்பவரை பிடித்தனர்.
போலீஸ் நடத்திய விசாரணையில், சிறுமி அவரது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ”உன்னுடைய மாமா வயலில் நிற்கிறார். அங்கு அழைத்துச் செல்கிறேன்” எனக் கூறி அங்குள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கழுத்துப்பகுதியில் குத்தியும் தலையில் அடித்துக்கொலை செய்ததாகவும் ராஜா ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் இன்று மருத்துவ பரிசோதனைக்காக ராஜாவை இரண்டு காவலர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது கைவிலங்கை உருவிக்கொண்டு மருத்துவ மனையிலிருந்து ராஜா தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அடுத்து இரண்டு காவலர்களும் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தப்பிச்சென்ற ராஜாவை பிடிக்க 6 தனிப்படைகள் அமைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார்,
மேலும் தப்பிச் சென்ற ராஜாவை பிடிக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள முள்ளூர் ராஜாபட்டி கரையாம்பட்டி தென்னந்திரையான்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான்கு மணி நேரத்தையும் தாண்டி தீவிரமாக தேடி வருகின்றனர்,