தன்னுடைய சொந்த பேத்திகளை கிணற்றில் வீசிய பாட்டி- கள்ளக்குறிச்சியில் நேர்ந்த சோகம்!

தன்னுடைய சொந்த பேத்திகளை கிணற்றில் மூதாட்டி தூக்கி வீசியதால் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் நிறைமதி குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். சலவைத் தொழில் செய்து வரும் இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி, அமுதினி(வயது 2), ரிஷிகா (வயது 4) ஆகிய மகள்கள் உள்ளனர்.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது மாமியார் வீடான தியாகதுருகத்திற்கு தனது பிள்ளைகளை அழைத்து கீர்த்தனா சென்றுள்ளார். மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக இருந்துவிட்டு நேற்று இரவு எல்லோரும் சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கிவிட்டனர்.
இன்று அதிகாலை 3:00 மணி அளவில் கீர்த்தனா எழுந்து பார்த்தபோது தனது 2 பெண் பிள்ளைகளையும் காணவில்லை என பதறிப்போய் உறங்கிக் கொண்டிருந்த தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவர்கள் இருவரும் அலறியடித்து பல இடங்களில் தேடி பார்த்தனர்.
சிறுமிகள் கிடைக்காத நிலையில் கீர்த்தனாவின் தாயார் மனநிலை பாதிக்கப்பட்ட வள்ளியம்மாள் என்பவரை அடித்து கேட்டபோது அவர் கிணற்று பக்கம் கை காட்டியுள்ளார். இன்று காலை 7 மணி அளவில் உதயமாம்பட்டு செல்லும் சாலையில் உள்ள பலராமன் என்பவரது விவசாய கிணற்றில் சந்தேகத்தின் அடிப்படையில் ஊர் மக்கள் உதவியுடன் தேடி பார்த்துள்ளனர்.
கிணற்றில் தண்ணீரின் ஆழம் அதிகமாக இருந்ததால் சிறுமிகளை தேடுவதற்காக தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதனடிப்படையில் தியாகதுருகம் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனுவாசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 7 பேர் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் ரிஷிகா (வயது 4) மற்றும் அமுதினி (வயது 2) ஆகிய இருவருடைய சடலமும் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.
அதன்பின்னர் தியாகதுருகம் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரண்டு சிறுமிகளின் உடலையும் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன்பின்பு சிறுமிகளின் பாட்டி வள்ளியம்மை மற்றும் தந்தை திருஞானசம்பந்தர் தாயார் கீர்த்தனா ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்யப்பட்டது. அதில் மனநலம் பாதிக்கப்பட்ட வள்ளியம்மை தான் தனது பேத்திகளை கிணற்றில் வீசியுள்ளது தெரியவந்தது.
இச்சம்பவம் குறித்து தியாகதுருகம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மனநிலை பாதிக்கப்பட்ட பாட்டியால் கிணற்றில் வீசப்பட்டு 2 இளம் பிஞ்சுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது