“ராமர் கோவிலுக்காக ரூ.11 நிதி ஒவ்வொரு குடும்பமும் தர வேண்டும்” உ.பி முதல்வர் கோரிக்கை.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்க்காக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஓவ்வொரு குடும்பமும் ஒரு செங்கல்லும், ரூ.11 நிதியையும் அளிக்கவேண்டுமென உத்திரபிரதேச முதல்வர் கோரிக்கைவிடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 5 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 81 உறுப்பினர்களைக் கொண்ட இந்தத்தேர்தலின் 1, 2 மற்றும் 3ம் கட்ட தேர்தல்கள் முடிவடைந்தன. 4ம் கட்ட தேர்தல் டிசம்பர் 16ம் தேதியும், 5ம் கட்ட தேர்தல் டிசம்பர் 20ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதியான பகோதர் பகுதியில் உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யா பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தை துவங்கினார். பரப்புரையில் பேசிய அவர், குரியரிமை சட்டத்தை எதிர்க்கட்சிகள் எதிர்க்கின்றன, அவர்கள் பாகிஸ்தான் போன்று பேசுகின்றனர் என்றார்.
மேலும் பேசிய அவர் 500 ஆண்டுகளாக நிலவிவந்த அயோத்தி பிரச்சனைக்கு பிரதமர் மோடி தனது கடும் முயற்சியால் வெற்றி கொண்டுள்ளார், என மோடியை புகழ்ந்தார். பின்னர் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படுவது உறுதி என கூறிய யோகி ஆதித்யாநாத், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ராமர் கோவில் கட்டுவதற்க்காக ரூ.11 நிதியையும், ஒரு செங்கல்லையும் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார். மேலும் ராமர் ராஜ்ஜியம் எந்தவித பாகுபாடும் இல்லாதது, சமூகத்தின் பங்களிப்பிலேயே ராமர் ராஜ்யம் இயங்குகிறது என தெரிவித்தார்.