இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது – மத்திய அரசு நீதிமன்றத்தில் வாதம்!
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பான வழக்கில் ஆஜரான மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், ‘இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்பதால் குடியுரிமை வழங்க முடியாது,’ என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வாதிட்டார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019-ம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட கலெக்டரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட கலெக்டர் மத்திய அரசுக்கு தாமதமின்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
ஆனால், அதிகாரிகள் இந்த உத்தரவை முறையாக பின்பற்றவில்லை எனக்கூறி அந்த அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
இதற்கிடையே இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று (30/07/2021) உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தலைமை நீதிபதி அமர்வு மற்றும் நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்பதால் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது” என வாதிட்டார்.
இதையடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, “தனி நீதிபதி மனுவைப் பரிசீலிக்குமாறே உத்தரவிட்டார். குடியுரிமை வழங்குங்கள்; இல்லையெனில் நிராகரியுங்கள். அதற்கு ஏன் மேல்முறையீட்டு மனு தொடர்ந்தீர்கள்?
தமிழக அரசின் முடிவாயினும் அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும்” எனக் கூறி, இந்த வழக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.