பாரிஸ் கார்னருக்கு வந்த சோதனை-256 கடைகளுக்கு சீல் ..ஆடிப் போன வியாபாரிகள்!

August 5, 2022 at 5:47 pm
pc

சென்னையில் வர்த்தக ரீதியாக மிகவும் புகழ்பெற்று விளங்கும் பகுதி பாரிஸ் கார்னர். இது பெருமாள் முதலி தெரு, ஆண்டர்சன் தெரு, மின்ட் தெரு உள்ளிட்ட 25 சிறிய வீதிகளை கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு தெருவிலும் ஒரு குறிப்பிட்ட பொருட்களை கொண்ட கடைகள் மட்டும் இருக்கும். அதாவது ஆடைகள், நகைகள், பாத்திரம், வாகன உதிரி பாகங்கள், ஸ்டேஷனரி, உணவு என அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும்.

இவற்றை மொத்தமாகவும், சில்லறையாகவும் வாங்க முடியும். எந்நேரமும் கூட்டம் நிரம்பி காணப்படும் இப்பகுதி, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட மிகவும் பழமையான பகுதியாகும். இந்நிலையில் பாரிஸ் கார்னரில் உள்ள டிவிகள், டிவிடி பிளேயர்கள், திரைப்பட சிடிக்கள், ஸ்பீக்கர்கள், லைட்கள் உள்ளிட்டவற்றை விற்கும் 256 கடைகளுக்கு சீல் வைத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

256 கடைகளுக்கு சீல்

ஏனெனில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வந்துள்ளனர். இதன்மூலம் மாநகராட்சிக்கு 58 லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீல் வைக்கப்பட்ட கடைகள் அனைத்தும் நார்த் பீச் ரோட்டில் உள்ள பர்மா பஸார் எக்ஸ்டன்ஷனில் இருக்கின்றன. இதுபற்றி சென்னை மாநகராட்சி மண்டல அதிகாரி ஜி.தமிழ்செல்வன் கூறுகையில், பர்மா பஸார் எக்ஸ்டன்ஷனில் உள்ள 272 கடைகளில் 256 கடைகள் வாடகை செலுத்துவதே இல்லை.

வாடகை என்னாச்சு?

ஒவ்வொரு மாதமும் வெறும் 400 ரூபாய் மட்டும் வாடகையாக செலுத்த வேண்டும். அதைக் கூட அவர்கள் செலுத்தவில்லை. இவர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் விளக்கம் கேட்டோம். வாடகையை தவறாமல் செலுத்துமாறு அறிவுறுத்தினோம். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இந்த சூழலில் கடைகள் சீல் வைக்கப்பட்ட சில மணி நேரங்களில் அதன் உரிமையாளர்கள் பலரும் வந்து DD-கள் மூலம் வாடகை பாக்கியை செலுத்த முன் வந்தனர்.

ஏன் இவ்வளவு லேட்?

மாநகராட்சிக்கு பணம் வந்து சேர்ந்த உடன், கடைகளை திறக்க அனுமதி அளிப்போம் என்றார். மேலும் பேசுகையில், பர்மா பஸார் பகுதியில் இருந்த ஏராளமான ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன எனக் கூறினார். அதேசமயம் சமூக ஆர்வலர் டேவிட் மனோகர் கூறுகையில், 7 ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. ஏன் இவ்வளவு தாமதமாக தற்போது நடவடிக்கை எடுக்கிறார்கள்.

அதிகாரிகளுக்கு செக்

மாநகராட்சி அதிகாரிகளுக்கு தற்போது தான் தெரிந்ததா? குறிப்பிட்ட சில விஷயங்களுக்கு மட்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். ஒருவேளை அரசியல் அழுத்தம் கூட காரணமாக இருக்கலாம். இத்தனை ஆண்டுகள் வரி வசூலிக்காமல் இருந்த அதிகாரிகளை முதலில் விரட்டி அடிக்க வேண்டும். உரிய நேரத்தில் வரி வசூலிக்கப்பட்டால் உள்கட்டமைப்பு வசதிகளை சரியாக மேம்படுத்த முடியும்.

வங்கிகளில் செலுத்தினால் போதிய வட்டியும் கிடைக்கும் என்று அறிவுறுத்தினார். இதற்கிடையில் எழும்பூரில் உள்ள பாந்தியோன் லேன் பகுதியில் நீதிமன்றம் உத்தரவு இருந்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்களா? என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website