இந்தியாவில் பிட்புல் மற்றும் ரோட்வீலர் நாய் இனங்களை வளர்க்க தடை: எங்கு தெரியுமா?

கான்பூரில் பிட்புல் மற்றும் ரோட்வீலர் நாய் இனங்களை வளர்க்க அம்மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், மீறினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதுடன், நாயும் பறிமுதல் செய்யப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை செய்துள்ளது. உத்தர பிரதேசம் கான்பூர் மாநகராட்சியில் நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதை தொடர்ந்து, ஆபத்தானதாக கருதப்படும் பிட்புல் ரோட்வீலர் ஆகிய 2 ஆபத்தான நாய் இனங்களையும் வளர்ப்பதற்கு தடை விதிக்க அம்மாநகராட்சி முடிவு செய்தது.
இதனையடுத்து, இது தொடர்பாக அம்மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், கவர்ச்சியான பயங்கரமான இன நாய்களை வளர்க்க மக்களுக்கு போதுமான குடியிருப்பு அல்லது பண்ணை வீடு இல்லை, அதனால் அவை மன அழுத்தத்திற்கு ஆளாகி மக்களை தாக்குகின்றன. பொதுமக்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்க, நகர எல்லைக்குள் பயமுறுத்தும் பிட்புல் மற்றும் ரோட்வீலர் நாய் இனங்கள் வளர்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்தின்படி, தடையை மீறி இந்த நாய் இனங்களை வளர்த்தால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பதுடன், அந்த நாயும் பறிமுதல் செய்யப்படும். கான்பூர் மாநகராட்சியின் கூடுதல் கமிஷனர் சூர்யகாந்த் திரிபாதி கூறுகையில், நகர்புறங்களில், வளர்ப்பு மற்றும் வியாபாரம் செய்யும் நோக்கத்தில், இவ்விரு நாய்களை இனப்பெருக்க செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி எல்லையில் சட்டவிரோதமாக நாய்களை யாராவது வளர்த்தால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். அவர்களின் நாயும் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்தார்.
லக்னோ, காசியாபாத் மற்றும் மீரட் ஆகிய இடங்களில் பிட்புல் நாய் மனிதர்களை தாக்கிய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அண்மையில் கான்பூரில் சர்சையா காட் பகுதியில் ஒரு பசுவை பிட்புல் நாய் தாக்ியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், பிட்புல் போன்ற ஆபத்தான நாய் இனங்கள் குறித்து ஒரு அச்ச உணர்வையும் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக கான்பூரில் பிட்புல் மற்றும் ரோட்வீலர் நாய் இனங்களை வளர்க்க கான்பூர் மாநகராட்சி தடை விதித்துள்ளது.