இந்தியா

10 -ம் வகுப்பு விடுமுறை நாளில் திடீரென தோன்றிய ஐடியா.., தற்போது கோடியில் சம்பாதிக்கும் ...

Quick Share

10 -ம் வகுப்பு விடுமுறை நாளில் தோன்றிய யோசனையால் தற்போது இளம்பெண் ஒருவர் கோடிகளில் சம்பாதித்து வருகிறார். 

யார் அவர்?

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, அகமது நகரை சேர்ந்த சிறுமி ஸ்ரத்தா தவான். இவருடைய தந்தை எருமை மாடுகளை வாங்கி விற்பனை செய்து வருபவர் ஆவார். இவருக்கு சொந்தமாக விவசாய நிலமும் உள்ளது. மேலும், இவரது வீட்டில் எருமை மாடுகளும் உள்ளன. 

10 -ம் வகுப்பு விடுமுறை காலத்தில் சிறுமி ஸ்ரத்தா தவான் இருந்தபோது, தனது தந்தைக்கு எப்படி உதவலாம் என்று நினைத்தார்.

அப்போது, எருமை மாடுகளை எப்படி வாங்குவது, விலையை எப்படி நிர்ணயம் செய்வது என்ற தொழில் யுக்தியை கற்றுக் கொண்டார். 

அந்த நேரத்தில் தான் அவருக்கு நாம் ஏன் பால் விற்பனை செய்யக்கூடாது என்று சிந்தித்துள்ளார். பின்னர் அவர், பள்ளிப்படிப்பை தொடர்ந்து கொண்டே பால் விற்பனையும் செய்தார். அப்படியே கல்லூரி படிப்பையும் முடித்தார்.

இதற்காக அவர் காலையில் 4 மணிக்கு எழுந்து பால் கறந்து அதனை விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு கல்லூரிக்கு செல்வார். பின்னர், மாலையில் மாடுகளை பராமரித்துக் கொள்வார். 

கோடியில் வருமானம்

2013 -ம் ஆண்டில் தொழில் தொடங்கிய ஸ்ரத்தா 2017 -ம் ஆண்டில் ஸ்ரத்தா ஃபார்ம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அப்போது அவரிடம் 30 எருமை மாடுகள் மட்டுமே இருந்தன.

மேலும், உள்ளூர் வேலையாட்களை வைத்து தொழில் செய்தார். பால் மட்டுமன்றி நெய், மோர், லஸ்ஸி, தயிர், பன்னீர் ஆகியவற்றையும் விற்பனை செய்தார்.

தற்போது, இவருக்கு 130 எருமை மாடுகள் உள்ளன. குறிப்பாக, இவர்கள் தயாரிக்கும் நெய் இயற்கை முறையில் இருப்பதால் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. மாட்டுச்சாணம் ஆகியவற்றை பயன்படுத்தி மின்சாரமும் தயாரித்து வருகின்றனர். 

2024 -ம் நிதி ஆண்டில் இவரின் நிறுவனம் 1 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. பால் சம்மந்தப்பட்ட தொழில் பயிற்சியை 5000 பேருக்கு வழங்கியுள்ளார்.     

தேசத்தை உலுக்கிய பெண் மருத்துவர்..நீதி கிடைக்குமா இன்று?

Quick Share

ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட (ஆக. 9) கொடூரச் சம்பவம் தேசத்தையே உலுக்கியிருக்கிறது. இதில், முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் காவல்துறையுடன் இணைந்து செயல்படும் தன்னார்வலர் என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி.

இந்த மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவப் படிப்பு பயின்றுவந்த பெண் மருத்துவர் (வயது 28) ஆகஸ்ட் 8-ம் தேதி இரவு பணியில் இருந்தார். மருத்துவமனையில் அமைந்திருக்கும் கருத்தரங்கக் கூடத்தில் அதிகாலை 3 மணியளவில் அவர் உறங்கச் சென்றார். மறுநாள் காலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அவரின் பிறப்பு உறுப்பு, வயிறு, வலது தொடை, கழுத்து, வலது கை, உதடு ஆகிய இடங்களில் காயங்கள் இருந்தன. கழுத்து எலும்பு முறிந்திருக்கிறது. இந்தக் கொடூரத்தைக் கண்டு ஆவேசமடைந்த சக மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும், செவிலியர்களும் போராட்டத்தில் இறங்கினர். ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடங்கிய போராட்டம், மேற்குவங்கம் முழுவதும் பரவியது. அதனால், மேற்குவங்கத்தில் மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

கொல்கத்தாவில் பெண் மருத்துவருக்கு இழைக்கப்பட்ட அந்தக் கொடுமைக்கு எதிராக டெல்லி உள்பட பல இடங்களில் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். டெல்லியில் மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி, ஆர்.எம்.எல் மருத்துவமனை, லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி, வி.எம்.எம்.சி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனை, தீன்தயாள் உபாத்யாய் மருத்துவமனை, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் மருத்துவக் கல்லூரி, தேசிய காசநோய் மற்றும் சுவாச நோய்கள் மருத்துவமனை ஆகியவற்றில் மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்தச் சூழலில்தான், கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் குடும்பத்தை முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்தார். அப்போது, மருத்துவரின் குடும்பம் விரும்பினால், இந்த கொலை வழக்கின் விசாரணையை மத்திய விசாரணை அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறினார். மேலும், ‘ஆகஸ்ட்18-ம் தேதிக்குள் மாநில போலீஸார் இந்த வழக்கு விசாரணையை முடிக்கத் தவறினால், சி.பி.ஐ-யிடம் வழக்கு ஒப்படைக்கப்படும்’ என்றும் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றிய சக ஜூனியர் மருத்துவர்கள் நான்கு பேர் போலீஸ் விசாரணைக்கு ஆளாகியிருக்கிறார்கள். அந்த நால்வரும்,
கொலை சம்பவம் நிகழ்ந்த அன்று இரவு கொலை செய்யப்பட்ட அந்த பெண் மருத்துவருடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட்டவர்கள். நான்கு மருத்துவர்களும் அங்கிருந்து சென்ற பிறகு, அந்த பெண் மருத்துவர் மட்டும் கருத்தரங்கு கூடத்தில் தூங்கியிருக்கிறார். அப்போது, அதிகாலை நான்கு மணியளவில் முக்கியக் குற்றவாளி என்று தற்போது சந்தேகிக்கப்படும் சஞ்சய் ராய், உள்ளே நுழைந்து பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்று போலீஸ் தரப்பு கூறுகிறது.

மேலும், ‘பெண் மருத்துவரின் கழுத்து நெரித்து, அந்த நபர் கொலை செய்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக ஏழு மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள். 60 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது’ என்றும் போலீஸார் கூறுகிறார்கள். மருத்துவப் பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கு உடனடியாக மத்திய சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்தப் போராட்டத்தின் எதிரொலியாக, ஜி.ஆர்.கர் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அந்த மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். முதல்வர் சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கும் நிலையில், ‘பெண் மருத்துவர் கொலை வழக்கில் முக்கிய ஆதாரங்களை சந்தீப் கோஷ் அழித்துவிட்டார். அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று போராடிவரும் மருத்துவர்கள் வலியுறுத்திவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் கொலை வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

Quick Share

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 20) நடக்கிறது. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவம் குறித்து நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று காலை 10.30 மணிக்கு விசாரிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க உச்ச நீதிமன்ற உத்தரவுக்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியாவில் கல்வி கட்டணம் உயர என்ன காரணம்? – பிரபல தொழிலதிபர் கூறும் விளக்கம்!

Quick Share

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் கல்வி கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் பெரிய விவாதமே நடந்து கொண்டு வருகிறது. ஐதராபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி படிப்பதற்கான கல்வி கட்டணம் ரூ.2.3 லட்சத்தில் இருந்து ரூ.3.7 லட்சமாக அதிகரித்துள்ளது என்று பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் அவிரால் பாட் என்பவர் தந்து ட்விட்டர் எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், “கடந்த 30 ஆண்டுகளில் பள்ளிக் கட்டணம் 9 மடங்கும், கல்லூரிக் கட்டணம் 20 மடங்கும் அதிகரித்துள்ளது.

நாம் வீட்டு விலையில் கவனம் செலுத்தும் போது, ​​உண்மையான பணவீக்கம் கல்வியில் ஏற்பட்டுள்ளது. கல்வி என்பது மலிவு விலையில் இல்லை” என்று கூறியுள்ளார்.

இவரின் கருத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், சோஹோ Zoho நிறுவனதின் சிஇஓ -ஆன ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார்.

அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், ” நகர்ப்புற ரியல் எஸ்டேட் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதால் கல்வி கட்டுபடியாகாத அளவு ஆகிவிட்டது. இதனால், கல்வி கட்டணமும் உயர்ந்துள்ளது.

இது கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் சில்லறை வணிகத்தையும் பாதிக்கிறது. அரசியலில் இருந்து ஏராளமான ஊழல் பணம் ரியல் எஸ்டேட்டில் குவிக்கப்படுகிறது.

இதுவே பணவீக்கத்தை அதிகரித்து மார்க்கெட் விலையை எகிறச்செய்துள்ளது. ஒருவகையில் நாம் அனைவரும் ஊழலுக்கு பணம் செலுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஏழைகளை கோடீஸ்வரர் ஆக்கும் திட்டம்!!7 ரூபாய் கட்டினால் போதுமே.. வாழ்நாள் பூராவுமே ரூ.60,...

Quick Share

 தினந்தோறும் வெறும் 7 ரூபாய் எடுத்து வைத்தாலே, உங்களுடைய 60 வயதில் கோடீஸ்வரராக மாறிவிடலாம்.. எப்படி தெரியுமா? இந்த திட்டத்தின் பலன் என்ன? இந்த திட்டத்திற்காக மத்திய அரசு தரும் சலுகைகள் என்னென்ன தெரியுமா?

மத்திய அரசால் கூலித்தொழிலாளர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த தனிநபர்களுக்கான, உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதிய திட்டம்தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.. இது 2015-16ம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது..

இதுவரை 7 கோடிக்கும் அதிகமான நபர்கள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளார்கள்.. இந்த திட்டமானது, வயதானவர்களுக்கு, பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டமாகும். 7 ரூபாய்: அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் 18 வயது முதல் 40 வயது வரையிலான நபர்கள் முதலீடு செய்யலாம். நீங்கள் 18 வயதாகும்போது குறைந்தபட்சம் மாதம் ரூ.210 முதலீடு செய்யலாம்… தினமும் வெறும் 7 ரூபாய் சேமித்து வந்தாலே, அதாவது மாதம் ரூ210 சேமித்து வந்தாலே, 60 வயதாகும்போது ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் வரை ஓய்வூதியமாக நீங்கள் பெற முடியும்.. எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதை பொறுத்து பென்சன் தொகை அதிகமாக இருக்கும். மாதம் 5 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற வேண்டுமானால், 18 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.210 செலுத்த வேண்டும். இதே தொகையை 3 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 626 ரூபாயும், 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 1,239 ரூபாயும் செலுத்த வேண்டும். மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெற விரும்பினால், 18 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.42 செலுத்த வேண்டும்.

நாமினிகள்: சந்தாதாரர் திடீரென இறக்க நேர்ந்துவிட்டால் அவரின் வாழ்க்கை துணைக்கு அந்த பென்ஷன் வழங்கப்படும்… ஒருவேளை 2 பேருமே இறந்துவிட்டால், அந்த பென்ஷன் தொகை சந்தாதாரரின் நாமினிக்கு வழங்கப்படும்.. 60 வயதிற்கு முன்பாகவே சந்தாதாரரால் இந்த திட்டத்திலிருந்து வெளியேற முடியாது. எனினும் ஒருசில விதிவிலக்குகள் உண்டு.. அதிக தொகையை கட்டி பென்ஷனை அதிகரித்துக்கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் இருக்கிறது. வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் உள்ளது. வருமான வரி செலுத்தாத இந்திய குடிமகன் அனைவருமே இந்த சமூக பாதுகாப்பு நல திட்டத்தில் சேர்ந்து பயன் பெற இயலும். பெஸ்ட் சாய்ஸ்: பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் அடல் பென்ஷன் திட்டத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம். ஆன்லைன் மூலமும் நீங்கள் கணக்கை துவங்கலாம். இதற்கு வங்கிக்கணக்கு, ஆதார் கார்டு போன்றவை ஆவணமாக வழங்க வேண்டும். மொத்தத்தில், அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர் மற்றும் வேறு எந்த ஓய்வூதிய திட்டத்திலும் முதலீடு செய்யாதவர்களுக்கு இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டமானது பெஸ்ட் சாய்ஸாக இருக்கும்.

இந்தியாவில் ரூ.7,035 கோடி முதலீடு செய்துள்ள கனேடிய நிதி நிறுவனம்!

Quick Share

கனேடிய நிதி நிறுவனமொன்று இந்தியாவில் முதல் காலாண்டில் ரூ. 7,035 கோடி முதலீடு செய்துள்ளது. 2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், கனடாவின் முக்கிய நிதி நிறுவனமான கனடா ஓய்வூதிய திட்ட முதலீட்டு வாரியம் (CPPIB), கனடா ஓய்வூதிய திட்டத்தில் (CPP) இருந்து 838 மில்லியன் டொலர் (ரூ. 7,035 கோடி) மதிப்புள்ள பணத்தை இந்தியாவில் முதலீடு செய்துள்ளது.

இந்த முதலீடு முக்கியமாக கட்டமைப்பு (infrastructure), தொழில்நுட்பம், உற்பத்தி (manufacturing), மற்றும் நுகர்வோர் உற்பத்திகள் (consumer goods) போன்ற துறைகளில் மையமாகியுள்ளது.

குறிப்பாக, நீண்டகால வளர்ச்சியுடன் கூடிய திட்டங்களில் இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா என்பது வளர்ச்சியடைந்த பொருளாதாரமாக மாறுவதற்கு நிறைய சாத்தியங்கள் உள்ள நாடாக கருதப்படுகிறது.

அதனால், கனடா நிறுவனம் இந்திய சந்தையில் தங்கள் இடத்தை பலப்படுத்துவதற்காக இந்த முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மத்திய அரசின் முதலீட்டு சீர்திருத்தக் கொள்கைகள், சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒரு ஈர்க்கக்கூடிய இடமாக மாறியுள்ளது. இதனை பிரதிபலிப்பதாகவே கனடா நிறுவனத்தின் இந்த முதலீடு பார்க்கப்படுகிறது.

கனடா நிதி நிறுவனம், அடுத்தடுத்து மேலும் பல துறைகளில் அதிகளவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும்.

இந்த தகவல், இந்தியாவில் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை மேலும் அதிகரித்துள்ளதை காண்பிக்கிறது, மேலும் இந்தியாவின் வளர்ச்சியையும் முன்னெடுத்துச் செல்கிறது.

தமிழ்நாட்டிற்கு வெறும் 1000 ரூபாய் தான்: ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிய இந்திய அரசு!

Quick Share

தமிழ்நாட்டில் முக்கிய ரயில் திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வந்துள்ளது. தேர்தலுக்கு முன்பு போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளது என்ற தகவல் ரயில்வே பிங்க் புத்தகம் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுபெற்ற பின் இன்றைய தினம் ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான பிங்க் புத்தகம் வெளியாகியுள்ளது.

இதில் தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட்டின் பிங்க் புத்தகத்தில் தெற்கு ரயில்வேயின் புதிய வழித்தடங்களுக்கு ரூ. 976 கோடி ஒதுக்குவதாக அறிவித்திருந்தார்கள். ஆனால், இன்று வெளியிடப்பட்டுள்ள பிங்க் புத்தகத்தில் அத்தொகை ரூ. 301 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.

இரட்டைப்பாதை திட்டங்களுக்கு ரூ 2,214 கோடி ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 1,928 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களான திண்டிவனம் – செஞ்சி- திருவண்ணாமலை வழித்தடத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்திப்பட்டு- புத்துருக்கு ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. திண்டிவனம்- நகரிக்கு ரூ. 350 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது 153 கோடி தான் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு பழனிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை- மகாபலிபுரம்- கடலூர் கடற்கரை பாதைக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை- அருப்புக்கோட்டை- தூத்துக்குடிக்கு ரூ. 100 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இப்போது வெறும் ரூ. 18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி- இருங்காட்டுக்கோட்டை -ஆவடி லைனுக்கு ரூ. 25 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொரப்பூர் – தர்மபுரிக்கு ரூ.115 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ரூ.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல இரட்டை பாதை திட்டங்களில் காட்பாடி – விழுப்புரத்துக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் -கரூர்- திண்டுக்கல் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு -கரூர் இரட்டை பாதைக்கு ரூ. 150 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இப்போது வெறும் ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் வந்த பிங்க் புத்தகத்தில் ரூ. 350 கோடி, ரூ. 150 கோடி என்று ஒதுக்கியது வெறும் தேர்தலுக்காக தான்.

உண்மையான பிங்க் புத்தகம் வந்த பிறகு தான் அது வெட்ட வெளிச்சமாகும் என்று நான் நாடாளுமன்றத்திலேயே கூறினேன். இப்போது உண்மை வெளிவந்து விட்டது.

பொது பட்ஜெட் முடிந்ததும் வெளியிடப்பட வேண்டிய இரயில்வே பிங்க் புத்தகத்தை வெளியிடாமலே மோடி அரசு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முடித்தது.

இடைக்கால பட்ஜெட்டில் தேர்தலுக்காக இவர்கள் செய்த போலி அறிவிப்புகள் நாடாளுமன்ற விவாதத்தின் வழியே நாட்டுமக்களுக்கு தெரிந்துவிடும். இவர்களின் போலி அரசியல் அம்பலமாகிவிடும் என்பதால் இவர்கள் பிங்க் புத்தகத்தையே வெளியிடாமல் விவாதத்தை நடத்தி முடித்தனர்.

பொது பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் எதையும் அறிவிக்காமல் அப்பட்டமான துரோகத்தை செய்த மோடி அரசு இரயில்வே திட்டங்களிலும் அதே துரோகத்தை அரங்கேற்றியுள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட நிதியும் பறிக்கப்பட்டது.

பிங்க் புத்தகம் வெளியிடாமல் அது சார்ந்த உண்மையும் மறைக்கப்பட்டது. அதன் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற வேண்டிய விவாதமும் பறிக்கப்பட்டது. மோடி அரசு தமிழ்நாட்டுக்கு செய்யும் துரோகத்தின் அளவு ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது.

இது சம்பந்தமாக நான் குற்றச்சாட்டை முன்வைத்த போது எனக்கு எதிராக பேசிய பாஜக தலைவர்கள் திருமதி வானதி சீனிவாசன் உள்ளிட்டவர்கள் இப்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்?பொதுபட்ஜெட்டில் சென்னை மெட்ரோ உள்ளிட்ட தமிழ்நாட்டின் புதிய திட்டங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி இப்பொழுது ரயில்வேயின் புதிய வழித்தடங்கள் அனைத்துக்கும் இழைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதிக்கு எதிரான எனது கண்டனத்தை பதிவு செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி – பிரதமர் மோடியின் முக்கிய அறிவிப்பு!

Quick Share

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நடைபெற்று வருவதாக சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கனவு காண்கிறது என்றும், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே நடைபெற்று வருவதாக சுதந்திர தின உரையின் போது பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா கனவு காண்கிறது என்றும், அதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக் 2024 இல் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய அனைத்து விளையாட்டு வீரர்களையும் பிரதமர் மோடி வாழ்த்தினார், மேலும் வரவிருக்கும் பாராலிம்பிக்ஸுக்கு பயணிப்பவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஜி20 உச்சி மாநாடு போன்ற பெரிய நிகழ்வை நடத்துவதற்கான உள்கட்டமைப்பு இந்தியாவிடம் உள்ளது என்பதை ஏற்கனவே நிரூபித்துள்ளதாகவும், 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதே நாட்டின் அடுத்த கனவு என்றும் உரையின் போது பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தியக் கொடியை உயர்த்திய இளைஞர்களும் இன்று நம்முடன் இருக்கிறார்கள். 140 கோடி நாட்டு மக்கள் சார்பில் அனைத்து வீரர், வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… இன்னும் சில நாட்களில் இந்தியாவின் மாபெரும் அணி புறப்படும். பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் பாராலிம்பியன்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்… G20 உச்சி மாநாட்டை இந்தியா பெரிய அளவில் நடத்துவது, பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உண்டு என்பதை நிரூபித்துள்ளது. 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த, அதற்கான ஆயத்தங்களை செய்து வருகிறோம்…’’ என்று செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி கூறினார்.

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் 19 பதக்கங்களையும், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்கள் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கத்தையும் இந்தியா தொடரும்.

ஆகஸ்ட் 28 ஆம் திகதி தொடங்கும் பாரிஸ் பாராலிம்பிக்ஸிற்காக இந்தியா தனது மிகப்பெரிய 84 தடகள வீரர்களை களமிறக்கியுள்ளது. 84 தடகள வீரர்கள் வில்வித்தை, தடகளம், பூப்பந்து, கேனோயிங், சைக்கிள் ஓட்டுதல், பிளைண்ட் ஜூடோ, பவர் லிஃப்டிங், ரோயிங், துப்பாக்கி சுடுதல், நீச்சல் உள்ளிட்ட 12 விளையாட்டுகளில் போட்டியிட உள்ளனர்.

ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்திக்குப் பிறகு இந்த மைல்கல்லை எட்டிய மூன்றாவது பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற பிரதமர் மோடி, சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து 11வது முறையாக நாட்டு மக்களுக்கு இன்று உரையாடிய போதே இந்த விடயத்தையும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.17,843 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலத்தில் விரிசல்: கான்ட்ராக்டருக்கு ரூ.1 கோடி அபரா...

Quick Share

இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் சேது பாலத்தில் விரிசல் ஏற்பட்டதாக தகவல் பரவிய நிலையில் ஒப்பந்ததாரருக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பை மற்றும் நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ தூரத்தில் அடல் சேது பாலம் என்ற கடல் பாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலமானது இந்தியாவின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மேலும், இது மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது.

கடந்த 2018 -ம் ஆண்டு தொடங்கிய பாலத்தின் பணிகள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் முடிந்தது. ரூ.17,843 கோடி செலவில் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்ட அடல் சேது பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில் அடல் சேது பாலம் திறக்கப்பட்ட ஐந்தே மாதங்களில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக சில புகைப்படங்களை மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் வெளியிட்டிருந்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், சேது பாலத்தின் முக்கிய பகுதியில் விரிசல் ஏதும் இல்லை என்று மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் பதில் அளித்தது.

இந்நிலையில் , கடந்த ஜூன் மாதம் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பின்னர் சரிசெய்யபட்டது என்றும், பாலத்தை கட்டிய ஸ்டார்பக் ஒப்பந்ததாரருக்கு 1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலானது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியின் வழியாக பெறப்பட்டுள்ளது.

வயநாட்டு நிலச்சரிவில் கட்டுக்கட்டாக கிடந்த பணம்..

Quick Share

வயநாடு பேரிடர் பகுதியில் தீயணைப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ரூ.4 லட்சம் ரொக்கப் பணம் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளார்மலை பள்ளிக்கு அருக்கு நடந்த தேடுதல் பணிக்கிடையே பணம் கிடைத்தது. இந்த பணம் முழுவதும் வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்படும். பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டிருந்த நிலையில், பணம் கண்டெடுக்கப்பட்டது. முழுவதும் சேறு நிறைந்து நனைந்த நிலையில் இருந்ததால் பாதுகாப்பாக காய வைத்து ஒப்படைக்கப்படும்.

‘அகண்ட பாரதத்திற்காக நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும்’ – செங்கோட்டை...

Quick Share

நாட்டின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் செங்கோட்டையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கானோர் அங்கே பிரதமர் மோடியின் உரை கேட்பதற்காக கூடியுள்ளனர். முன்னதாக ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அங்குள்ள நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பின்னர் செங்கோட்டை சென்று மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. சிறிது நேரம் அங்கு சாரல் மழை பொழிந்தது.

செங்கோட்டை வந்த பிரதமர் மோடி 11 ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முப்படையின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து உரையை தொடங்கிய பிரதமர் மோடி, ‘பாரத் மாதா கி ஜே…. பாரத் மாதா கி ஜே…’ என மூன்று முறை உச்சரித்து விட்டு,பேசத் தொடங்கினார். 

அவரது உரையில், ”நாட்டுக்காக இன்னுயிர் தந்தவர்களை இந்த நேரத்தில் போற்றுகிறேன். விவசாயிகளும் ராணுவ வீரர்களும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டுள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்தவர்களுக்கு நாம் கடன் பட்டுள்ளோம். வயநாடு உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகள் வருத்தத்தை அளிக்கிறது. 40 கோடி மக்கள் தான் பிரிட்டிஷ் அரசை எதிர்த்தனர். தற்பொழுது 140 கோடி மக்கள் உள்ள நிலையில் நாட்டின் வலிமை வளர்ச்சி அடைந்துள்ளது. 

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும். நாட்டு மக்கள் அகண்ட பாரதத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும். உத்வேகமாக செயல்பட்டால் 2047-ல் வளர்ச்சியடைந்த பாரதமாக நாம் உருவாக முடியும். ஜல் ஜீவன் திட்டத்தால் 15 கோடி குடும்பங்கள் பயன்பெற்றுள்ளன’ எனத் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

மருமகளை திருமணம் செய்த மாமியார்;சமூக வலைதளங்களில் படு வைரல்..

Quick Share

இந்தியாவில் மாமியார் தன் சொந்த மருமகளை திருமணம் செய்த வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும் – ஆணும், பெண்ணும் – பெண்ணும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்பூர்வ அனுமதி கிடையாது.

சில நாடுகள் தன்பாலி திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்கி இருந்தாலும் இந்தியாவில் தன்பாலின திருமணத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. அவ்வப்போது நடைபெறும் சம்பவங்கள் இணையதளங்களில் வெளியாகி விவாதத்தையும் தூண்டி விடுகின்றது.

பீகார் மாநிலம் கோபால் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள பெல்வா கிராமத்தைச் சேர்ந்த நடுத்தர வயது பெண் சுமன். இவருடைய சொந்த மருமகள் ஷோபா. கடந்த 3 ஆண்டுகளாக மாமியார் சுமனுக்கு மருமகள் சோபா மீது காதல் ஏற்பட்டதுடன் இருவரும் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் ரீதியாக நெருக்கமாக இருந்தனர். இது இவர்களின் கணவர்களுக்கு தெரியவந்தது.

அவர்கள் இருவரையும் கண்டித்தனர். இதனால் மாமியார் மருமகள் இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அங்குள்ள ஒரு கோவிலில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

அப்போது மாமியார் சுமன் பேண்ட் சட்டை அணிந்து மணமகன் போல காட்சி அளித்தார். மருமகள் சோபாவுக்கு மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

கோவிலில் இருவரும் மாலை மாற்றினர். பின்னர் மாமியார் சுமன் மருமகள் கழுத்தில் தாலி கட்டினார்.  தமது திருமண தொடர்பில் மாமியார் கூறுகையில், 

நான் எனது மருமகளை வெறித்தனமாக காதலிக்கிறேன். அவள் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதை என்னால் தாங்க முடியவில்லை. உலகம் என்ன நினைக்கும் என்பதை பற்றி கவலைப்படாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள எங்களது மனம் தூண்டியது.

கணவரை பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எப்போதும் பிரிய மாட்டோம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை என அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் அவர்களின் திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது.   




You cannot copy content of this Website