தொடரும் தொல்லை – ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: மேலும் ஒரு ஆசிரியர் கைது!
மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில் சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிகவியல் துறையில் ஆசிரியராக ராஜகோபாலன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டது. மாணவிகளுக்கு ஆசிரியர் ராஜகோபாலன் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், ஆன்லைன் வகுப்புகளில் அரைகுறை ஆடையுடன் வருவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. மாணவிகளிடம் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்க அவரை பொலிசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
பத்ம சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து சென்னை சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் ஆசிரியர் ஆனந்த் மீது முன்னாள் மாணவர்கள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர்.
அதாவது,மகரிஷி வித்யா மந்திர் பள்ளி முன்னாள் மாணவி ஒருவர்,ஆனந்த் மீதான பாலியல் புகாரை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
அந்த பதிவை ஆனந்துக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அதற்கு பதில் தந்த ஆனந்த், என்னிடம் காமர்ஸ் படித்த உங்கள் எல்லோருக்கும் என்னை பற்றி தெரியும். “மை டியர் மகளே” என்னுடைய வேலையை அர்ப்பணிப்புடன் செய்து வருவது கடவுளுக்கு தெரியும்.
நான் கொஞ்சம் ஸ்டிரிக்டாக இருப்பேன் அவ்வளவுதான். மாணவிகளை பாதுகாப்பதே வைத்திருப்பதே நான்தான். இதை யார் செய்தார்கள் என்று தெரியவில்லை.
கட்டாயமாக என்னிடம் படித்த மாணவிகள் இதை செய்திருக்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார்.
இதற்கு பதில் கூறிய மாணவி, “சார் மாணவர்கள் மீது அக்கறை என்று கூறிவிட்டு தப்பு செய்தது நீங்கதான். உங்ககிட்ட படித்தவர்களுக்கு அதைத்தான் சொல்றாங்க. இந்த கேவலமான செயலை நீங்க செஞ்சீங்கன்னு ஒத்துக்கொள்ள போறீங்களா..? என்ன பண்ண போறீங்க…? என்று கேட்டுள்ளார்.
மேலும்,சில மாணவிகள், குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம், மகளிர் ஆணையம், உயர்கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு கடிதம் எழுதினர். அவ்வாறு புகார்கள் வந்ததை அடுத்து ஆசிரியர் ஆனந்த் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் புகார் தொடர்பாக நேர்மையாகவும், வெளிப்படை தன்மையுடனும் விசாரணை நடக்கும் வகையில் குழு அமைக்கப்பட்டு, குழந்தைகள் உரிமைக்கான பாதுகாப்பு ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்,சென்னை மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்த் மீது,அவரால் பாதிக்கப்பட்ட மாணவி எழுத்துப்பூர்வமாக கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து,தற்போது ஆனந்தை போக்சோ உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் மகளிர் பொலிசார் கைது செய்துள்ளனர்.