கர்ப்பிணி கூட்டு பலாத்காரம்..!!குடும்பத்துடன் ரயிலுக்கு காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை …
ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டம் ரிபள்ளி ரயில் நிலையத்திற்கு கடந்த சனிக்கிழமை இரவு ஒரு நபர் தனது கர்ப்பிணி மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வந்துள்ளனர். பிரகாசம் மாவட்டத்தில் வசித்து வரும் அந்த குடும்பம் வேலை தேடி குண்டூரில் இருந்து கிருஷ்ணா மாவட்டத்திற்கு செல்வதற்காக ரயிலுக்கு காத்திருந்தனர்.
எனினும், இரவு வெகுநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்ட நிலையில், நடைமேடையில் இருந்த அமரும் பலகையில் அவர்கள் படுத்து கொண்டனர். இந்த நிலையில், நள்ளிரவில் ஒரு சிறுவன் உள்பட 3 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. அவர்கள் குடிபோதையில் இருந்துள்ளனர்.
தூங்கி கொண்டிருந்தவர்களை எழுப்பிய அந்த கும்பல் கணவரை அடித்து, தாக்கியுள்ளது. இதனை அவரது கர்ப்பிணி மனைவி தடுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த 3 பேரும் கணவரை விட்டு விட்டு, ரயில் நிலையித்தில் இருந்து தரதரவென கர்ப்பிணியை இழுத்து கொண்டு அருகேயிருந்த புதர் பகுதிக்கு அழைத்து சென்று கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அவர்களிடம் இருந்து தப்பிய கணவர், ரயில்வே போலீசாரின் உதவியை தேடி சென்றுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் உதவிக்கு என அதிகாரி ஒருவரையும் காணவில்லை. இந்நிலையில், புதரில் கிடந்த அவரது மனைவி மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில் கணவர், 3 குழந்தைகளுடன் ரயிலுக்கு காத்திருந்த கர்ப்பிணியை ஒரு சிறுவன் உள்ளிட்ட 3 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.