அதிர்ச்சி தகவல் – வெயிலின் அதிக தாக்கத்தால் 25 பேர் பலி.
வெயில் தாக்கத்தால் நடப்பு ஆண்டில் இதுவரையில் 25 பேர் பலியானதாக மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாடு முழுவதும் வெயில் கொளுத்தி வருகிறது. கடும் வெயில் மற்றும் வெப்ப அலை வீசுவதால் மதியம் மக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். வயதானவர்கள், குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முக்கியமாக அங்குள்ள துலே, நந்தூர்பர், ஜல்காவ் மற்றும் அகமது நகர், நாக்பூர் மற்றும் வடக்கு மகாராஷ்டிரா பகுதிகளில் ஏற்கனவே வெயில் அதிகரித்துள்ளது. இதனிடையே, நாளை முதல் 6ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தநிலையில் அதிக வெப்பம் காரணமாக மாநிலத்தில் இது வரையில் 25 பேர் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அளித்த தரவுகளின் படி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நடப்பு ஆண்டில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டில் வெயில் காரணமாக 19 பேர் உயிரிழந்து உள்ளனர். நடப்பு ஆண்டில் கடந்த 1ஆம் தேதி வரையில் வெயில் தாக்கம் காரணமாக 381 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக நாக்பூரில் 300-க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநிலம் முழுவதும் 25 பேர் உயிரிழந்து உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.