“புதிய பாஸ்போர்ட்டில் பாஜக சின்னம்” வெளியுறவு துறை அமைச்சகத்தின் “பலே “விளக்கம் !!
புதியதாக கொடுக்கப்பட்ட பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் போட்டிருப்பது பாதுகாப்பு நோக்கத்தில் தான் என வெளியுறவு துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் அதிகாரிகளால் கையெழுத்திட்டு வழங்கப்பட்ட புதிய பாஸ்போர்ட்களில் தாமரை சின்னத்தை பதிவிட்டு வழங்கியுள்ளதாக தகவல் வெளியானதால், இது மக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மக்களவையில்பேசிய கேரள மாநில காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே ராகவன் என்பவர், அரசியல் லாபங்களுக்காக புதிதாக வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டில் பாஜக கட்சியின் சின்னமான தாமரை அச்சடிக்கப்பட்டுள்ளதா என விமர்சித்தார்.
இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ்குமார், பாதுகாப்பு தீவிரப்படுத்தவும், போலி பாஸ்போர்ட்களை அடையாளம் காணவும், தற்போது வழங்கப்படும் புதிய பாஸ்போர்ட்களில் நமது நாட்டின் தேசிய சின்னமான தாமரை அச்சிடப்பட்டுள்ளது. அதேபோல பல பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இது போன்று மற்ற தேசிய சின்னங்களும் சுழற்சி முறையில் அச்சிடடபடும் என தெரிவித்தார்.