ஜெனரல் சுலைமான் கொலை !! அமெரிக்கா கடும் விளைவுகளை சந்திக்கும், ஈரான் எச்சரிக்கை !!

ஈரான் ஆதரவு பெற்ற குவாட்ஸ் படையின் தளபதி குவாஸிம் சுலைமானை ஏவுகணை தாக்குதல் நடத்தி கொலை செய்து அமெரிக்க ராணுவம் சர்வதேச தீவிரவாதத்தை செய்துள்ளது என கடுமையாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலையம் மீது கடந்த வாரம், ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினரால் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால், அமெரிக்காவை சேர்ந்த தனியார் பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த அமைப்பினர்மீது அமெரிக்கா நடத்திய பதில் தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லாவை சேர்ந்த போராட்டகாரர்கள் கடந்த செய்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அந்தண் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். அதனால், ஆத்திரமடைந்த அமெரிக்க ராணுவம் அதற்கு பதிலடியாக இன்று அதிகாலை பாக்தாத் விமான நிலையம் அருகே ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. இந்த அதிரடி தாக்குதலில் ஈரான் புரட்சிகர பாதுகாப்பு படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத்தலைவர் அபு மஹதி அல் முஹன்திசும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் அமெரிக்க அதிபராக டொனல்ட் ட்ரம்ப் உத்தரவின் பேரில் தற்காப்பு நோக்கத்திற்காக நடத்தப்பட்டதாக தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. இந்த சம்பவம் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து, ஈரான் அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்மட்ட குழுக்கள் இணைந்து தெஹ்ரானில் அவசர ஆலோசனை நடத்தவுள்ளது. ஈரான் அரசின் செய்தி ஊடகமான ஐ.எஸ்.என்.ஏ அமைப்பின் செயலாளரும், செய்தி தொடர்பாளருமான கேவன் கோசார்வி கூறுகையில் , “பாக்தாத்தில் தளபதி குவாசிம் சுலைமானை அமெரிக்க ராணுவம் கொலை செய்தது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம் என தெரிவித்தார். இதற்கிடையில் பேசிய ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவித் ஜாரிப் ட்விட்டரில் அமெரிக்காவை கடுமையாக சாடியுள்ளார்.

அதில் , “ஐ.எஸ்.ஐ.எஸ், அல் நுஸ்ரா, அல்கொய்தாவுக்கு எதிராக போராடி வந்த ஜெனரல் சுலைமானை கொலை செய்து சர்வதேச தீவிரவாதத்தை அமெரிக்கா செய்துள்ளது. இது மிகப்பெரிய தீவிர பேராபத்தை விளைவிக்கும். ஏற்கனவே இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை அதிகப்படுத்தும் முட்டாள்தனமான செயல், நேர்மையற்ற முறையில் யோசிக்காமல் செய்யும் சாகசங்களுக்கெல்லாம் அமெரிக்கா பொறுப்பேற்று அதை தாங்கிக்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். மேலும் ஈரான் புரட்சிப்படையின் முன்னாள் கமாண்டர் மோசின் ரேஸாய் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “தளபதி சுலைமானை கொன்ற அமெரிக்காவுக்கு எதிராக மூர்க்கத்தனமான பழிவாங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.