இறந்தவரை உயிரோடு வரவழைத்து நூதனமாக ரூ 1.5 கோடி நிலம் அபேஸ் – போலீசிடம் சிக்கிய கும்பல்..

சென்னையில் இறந்து போன ஒருவரை உயிரோடு இருப்பதாக கூறி ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்த மோசடி கும்பலை கைது செய்தனர் நில அபகரிப்பு போலீசார்.
சென்னையில் 2009ம் ஆண்டு இறந்த பெருமாள் என்பவருக்கு சொந்தமான 1035 சதுர அடி நிலம் நந்தம்பாக்கத்தில் உள்ளது. இந்தநிலத்தை விற்பதற்காக இறந்துபோன பெருமாள் என்பவர் உயிரோடு தான் உள்ளதாக, வேறு ஒரு நபரை அழைத்து வந்து இவர்தான் பெருமாள் என கூறி ஆள்மாறாட்டம் செய்து ரவிக்குமார் என்பவர் 2013ல் பெருமாளின் நிலத்தை வாங்கியது போல போலி ஆவணங்களை தயார் செய்து வேறொரு நபருக்கு விற்பனை செய்துள்ளார். அதுமட்டுமல்லாது அந்த நிலத்தை தனது மனைவி ஜெயக்குமாரியின் பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். இந்த தகவல் நிலத்தின் உரிமையாளரான பெருமாள் என்பவரின் மகன் கோபிக்கு தெரிய வரவே போலீசில் அவர் புகாரளித்துள்ளார்.
இந்த புகாரில் பேரில் மத்திய குற்றப்பிரிவின் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த மோசடியில் ஈடுபட்ட ரவிக்குமார், அவரது மனைவி ஜெயக்குமாரி மற்றும் உடந்தையாக இருந்த போத்திராஜ் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான சரவணன் எனும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.