குடியிருப்பு பகுதியில் விழுந்து நெருப்பு கோளமான ஹெலிகொப்டர்: அமைச்சர் உட்பட பலர் உடல் கருகி பலி

January 18, 2023 at 3:54 pm
pc

உக்ரேனில் தலைநகர் கீவ் அருகே குடியிருப்பு பகுதியில் நடந்த ஹெலிகொப்டர் விபத்தில் உள்விவகார அமைச்சர் உட்பட 16 பேர்கள் உடல் கருகி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் உட்பட 9 பேர்கள்

தொடர்புடைய ஹெலிகொப்டரில் அமைச்சர் உட்பட 9 பேர்கள் பயணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ப்ரோவரி நகரில் குடியிருப்பு பகுதியில் மோதி ஹெலிகொப்டரானது நெருப்பு கோளமாக மாறியுள்ளது.

இரு சிறார்கள் உட்பட 16 பேர்கள் கொல்லப்பட்ட நிலையில், 10 சிறார்கள் உட்பட 22 பேர்கள் காயங்களுடன் சிகிச்சையை நாடியுள்ளனர். முதன்மை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,

உக்ரைனின் உள்விவகார அமைச்சர் Denys Monastyrsky, துணை அமைச்சர் Yevhen Yenin மற்றும் செயலாளர் Yurii Lubkovych ஆகியோரே கொல்லப்பட்ட முக்கியஸ்தர்கள் என தெரிவித்துள்ளார்.

குறித்த ஹெலிகொப்டரானது சிறார் காப்பகம் ஒன்றில் மோதியுள்ளது. இதில் வெடிக்கும் சத்தம் பலமாக கேட்டதாகவும், தொடர்ந்து தீப்பற்றியெரிந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

நெருப்பு கோளமான ஹெலிகொப்டர்

சம்பவம் நடந்த போது அந்த சிறார் காப்பகத்தில் ஊழியர்கள் மற்றும் சிறார்கள் இருந்துள்ளனர். பலர் அப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் அதன் காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.

பனி மூட்டம் காரணமாக ஹெலிகொப்டர் கட்டிடத்தின் மீது மோதியிருக்கலாம் எனவும் கூறுகின்றனர். இதனிடையே, இந்த விபத்தானது சதியா அல்லது தொழில்நுட்ப கோளாறா, பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தவறினார்களா உள்ளிட்ட பல கோணத்தில் இந்த வழக்கை விசாரிக்க இருப்பதாக உள்விவகாரத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 60 பேர்கள் வரையில் கொல்லப்பட்ட துயரத்திற்கு பிறகு, ஹெலிகொப்டர் விபத்து தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website