த.வெ.க. மாநாடு: 234 தொகுதிகளுக்கு தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்!

October 14, 2024 at 3:19 pm
pc

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைக் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், மாவட்ட அளவில் கட்சியை வலுப்படுத்துவது என அடுத்தடுத்து நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதையடுத்து கட்சிக்கான கொடியைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தினார். மேலும் கட்சிக்கான பாடலையும் வெளியிட்ட அவர் கட்சிக் கொடிக்கான விளக்கத்தை விரைவில் நடக்கும் மாநாட்டில் சொல்வதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி த.வெ.க.வின் முதல் மாநாடு விழுப்புரத்தில் உள்ள விக்கிரவாண்டியில் வருகிற 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதனையொட்டி சமீபத்தில் மாநாட்டிற்கான பந்தக் கால் பூஜை விழா பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள விமர்சியாக நடைபெற்றது. இதையடுத்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், பல்வேறு ஊர்களில் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியிருந்தார். இதன் தொடர்ச்சியாக த.வெ.க. மாநாடு தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய 27 குழுக்களை அமைத்து தமிழக வெற்றிக் கழகம் நேற்று (12.10.2024) உத்தரவிட்டிருந்தது. 

அதன்படி மாநாடு ஒருங்கிணைப்புக் குழு, பொருளாதார குழு, சட்ட நிபுணர்கள் குழு, வரவேற்பு குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதார குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகனம் நிறுத்த குழு, உள்ளரங்க மேலாண்மை குழு, மேடை வடிவமைப்பு குழு, இருக்கை மேலாண்மை குழு, தீர்மான குழு, உபசரிப்பு குழு, திடல் மற்றும் பந்தல் அமைப்புக் குழு, பாதுகாப்பு மேற்பார்வை குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டன.

மேலும், மகளிர் பாதுகாப்புக் குழு, அவசரக் கால உதவிக் குழு, கொடிக் கம்பம் அமைப்புக்குழு, வழிகாட்டும் குழு, வானிலை தகவல் பகிர்வு குழு, கட்டுப்பாட்டு அறை கண்காணிப்புக் குழு, ஊடக ஒருங்கிணைப்புக் குழு, சமூக ஊடக குழு, பேச்சாளர்கள் மற்றும் பயிற்சி குழு, விளம்பர குழு, துப்புரவு குழு மற்றும் நிலம் ஒப்படைப்பு குழு என மொத்தம் 27 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் த.வெ.க. மாநாடு நடைபெறுவதையொட்டி தற்காலிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்தபடி, கட்சியின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழா, வருகிற 27ஆம் தேதி (27.10.2024) விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டுக்கான களப் பணிகள் தொடர்ந்துவரும் நிலையில், த.வெ.க. தலைவர் விஜய்யின் ஆணைப்படி, சட்டமன்றத் தொகுதி அளவில் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைக்க, மாவட்டத் தலைவர்கள் மற்றும் அணித்தலைவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் ஒருங்கிணைந்து செயல்பட, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website