தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏற்படும் மிகப்பெரிய மாற்றம்!!சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்!!

August 8, 2024 at 2:02 pm
pc

சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை 3-வது முனையமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரெயில்களுக்காக 4 நடைமேடைகளும், விரைவு ரயிலுக்காக 4 நடைமேடைகளும் உள்ளது. கூடுதலாக நடைமேடை 9 மற்றும் 10 ஆகிய புதிய 2 நடைமேடைகள் அமைக்கப்பட்டு வருகிறது

சென்னையை அடுத்த பகுதி என்று சொல்லப்பட்ட தாம்பரம் கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் மையப்பகுதியாக வளர்ந்துள்ளது. தெற்கே செங்கல்பட்டு வரையிலும், மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், வடக்கே பொன்னேரி வரையிலும் சென்னை அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கிழக்கில் மகாபலிபுரம் வரையிலும் சென்னை வளர்ந்துவிட்டது. சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வளர்ந்துள்ள சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு தாம்பரம் உருவெடுத்துள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையமே தாம்பரத்தின் புறநகர் பகுதியான வண்டலூரை ஒட்டித்தான் இருக்கிறது. தாம்பரத்தில் இருந்து வெறும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் அதிகளவில் உருவெடுத்துள்ளன. தென் சென்னை மக்களின் முக்கிய ரயில் நிலையமாக உருவெடுத்துள்ளது.

சென்னை எழும்பூரில் போதிய இடம் இல்லாத காரணத்தால் எழும்பூர் மற்றும் சென்ட்ரலுக்கு பதில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. திருநெல்வேலி, கோவை, நாகர்கோவில் உள்பட தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட புதிய ரயில்கள் தற்போது தாம்பரத்தில் இருந்துதான் புறப்படுகின்றன.

இது தவிர ஆந்திரா வழியாக வடமாநிலம் செல்லும் ரயில்கள் சென்ட்ரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்பட தொடங்கி உள்ளன. இனி தென் மாவட்டங்களுக்கு ரயில் அறிவிக்கப்பட்டால், எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்தே புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு தாம்பரம் ரயில் நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

ஆனால் தாம்பரம் ரயில் நிலையம், சென்ட்ரல், எழும்பூர் போல் மிகப்பெரிய அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ள ரயில் நிலையமாக இல்லை. மேலும் 3வது முனையமாக மாற்றும் பணியும் இதுவரை நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு 1000 கோடி செலவில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள போகிறது. ரயில் நிலையங்களில் அதிநவீன கழிவறைகள், டிஜிட்டல் பலகைகள், எஸ்கலேட்டர்கள், புதுப்பிக்கப்பட்ட சேர்கள், வேளச்சேரி சாலை, ஜிஎஸ்டி சாலை என இருப்பகமும் உள்ள முகப்புகள், வாகனங்கள் வந்து செல்லும் வழி, நடை மேம்பாலங்கள், பார்க்கிங் வசதி, குடிநீர் வசதிகள், விளக்குகள், பிளாட்பார்ம்கள் என எல்லாமே மாற்றப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக தாம்பரம் ரயில் நிலையத்தை முழுமையாக 3வது முனையமாக மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் தண்டவாள பராமரிப்பு பணிகள் ஆரம்பித்தது. தண்டவாளத்தில் தற்போது உள்ள 220 கிலோ எடையுள்ள சிலிப்பர் கற்களை அகற்றிவிட்டு, புதிதாக 300 கிலோ எடை கொண்ட சிலிப்பர் கற்கள் அமைக்கப்படுகிறது. இதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அதில் ஏற்கனவே உள்ள ஜல்லி கற்கள் மாற்றப்பட்டுள்ளது. அதில் புதிய ஜல்லி கற்களை கொட்டி, அதன் மீது சிலிப்பர் கற்களை வைத்து தண்டவாளங்கள் புதுப்பிக்கும் பணி நடக்கிறது.

அதேபோல் இன்னும் சில வாரங்களில் நடைமேடை 10-ல் தண்டவாளம் அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக கூறிய அதிகாரிகள், கூடுதலாக 2 விரைவு ரயில் நிறுத்தம் அமைக்கப்பட உள்ளதால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளின் சிரமம் குறையும். முழுயைமாக தாம்பரம் 3வது முனையாக மாறும் எனறும் அதிகாரிகள் கூறினார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website