மோடிக்கு ரஷ்யாவின் உயரிய விருது!
இந்திய பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருது வழங்கப்பட்டது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ரஷ்யா பயணத்தின் போது சிறப்பு மரியாதையை பெற்றார். ரஷ்யாவின் உயரிய சிவிலியன் விருதான ‘The Order of Saint Andrew the Apostle’ அவருக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விருதை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பிரதமர் மோடிக்கு செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் மோடியின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு மிக உயர்ந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக புடின் கூறினார்.
இந்நிலையில், ரஷ்ய விருது அறிவிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி சமூக வலைதளங்களில் பதிலளித்துள்ளார். ரஷ்ய அரசாங்கத்தால் தி ஆர்டர் ஆஃப் செயின்ட் ஆண்ட்ரூ தி அப்போஸ்தலர் விருது வழங்கப்படுவதை ஒரு கௌரவமாக கருதுவதாக அவர் கூறினார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர் ரஷ்ய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக அவர் ட்வீட் செய்துள்ளார்.
ரஷிய பயணத்தின் போது புடினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக மோடி தெரிவித்தார்.
வர்த்தகம், பாதுகாப்பு, விவசாயம், தொழில்நுட்பம், புத்தாக்கம் போன்ற துறைகளில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றதாகத் தெரிவித்த அவர், மக்களிடையே நேரடி உறவுகளை வளர்ப்பதற்கும், இணைப்பை அதிகரிப்பதற்கும் அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.