அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டிய முகநூல் நண்பரை, வேறு ஒரு முகநூல் நண்பரை வைத்து கொலை செய்த பெண்!
திருமணம் செய்துகொள் இல்லையெனில் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டிய முகநூல் நண்பரை, வேறு ஒரு முகநூல் நண்பரை வைத்து கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத் அம்பர்பேட்டைப் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான புகைப்படக் கலைஞர் யாஸ்மா குமார். ஹைதராபாத் பிரஷாந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் 32 வயதான குடும்பத்தலைவி ஸ்வேதா ரெட்டி.
யாஸ்மா குமாரும், ஸ்வேதா ரெட்டியும் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து முகநூலில் மூலமாக நண்பர்களாக பழகிவந்துள்ளனர். செல்போன் எண்களை பகிர்ந்துகொண்ட இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிவந்துள்ளனர். முகநூலில் அடிக்கடி வீடியோ கால் மூலமாகவும் இருவரும் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் காதலர்களாக மாறியுள்ளனர். அதனால், அந்தரங்கமான பரிமாற்றங்களை இருவரும் முகநூல் வீடியோ காலில் அரங்கேற்றியுள்ளனர்.
யாஸ்மா குமாரை முழுமையாக நம்பிய ஸ்வேதாரெட்டி முகநூல் வீடியோ கால் கலந்துரையாடலில் உடையின்றி தோன்றியுள்ளார். அதே நேரத்தில், யாஸ்மாகுமார் அந்தரங்க வீடியோ கால் சேவையை ரெக்கார்டு செய்துள்ளார். அடுத்த சில நாட்களில், திருமணம் செய்துகொள் இல்லையெனில் அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என ஸ்வேதா ரெட்டியை யாஸ்மா குமார் மிரட்டியுள்ளார்.
நீயும் வேண்டும், உன் சொத்தும் வேண்டும் என தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்த யாஸ்மா குமாரை ரகசியமாக தீர்த்துக்கட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவெடித்துள்ளார் ஸ்வேதா. தனது பிரச்னை குறித்து இன்னொரு முகநூல் நண்பரும், ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வருமான அசோக்கிடம் கொட்டித் தீர்த்துள்ளார் ஸ்வேதா. ஸ்வேதாவின் கண்ணீரை துடைக்க முடிவு செய்த அசோக், தனது நண்பரான எலக்ட்ரீசியனான கார்த்திக்குடன் ஸ்வேதாவின் வீட்டிற்கு கடந்த 4ம் தேதி சென்றுள்ளார்.
திட்டமிட்டபடி, யாஸ்மாகுமாருக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்துள்ளார் ஸ்வேதா. சுத்தியலால் யாஸ்மாகுமாரின் தலையில் அடித்து கொலை செய்து, அருகில் உள்ள சாலையில் சடலத்தை வீசியுள்ளது இந்த கும்பல். அடையாளம் தெரியாத சடலம் என்று விசாரணையை தொடங்கிய போலீசார் மிக சாதுர்யமாக குற்றவாளிகளை கைது செய்துள்ளனர்.