ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 10-ம் வகுப்பு மாணவன்!
உ.பி.,யின் சீதாபூரில், ஆசிரியர் திட்டியதால், கோபமடைந்த மாணவர் ஒருவர், அவரை துப்பாக்கியால் 3 முறை சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.அந்த மாணவர், சக மாணவருடன் தகராறில் ஈடுபட்டதை பார்த்த ஆசிரியர் கண்டித்துள்ளார். இதனால், கோபமடைந்த அந்த மாணவர், சாலையில் நடந்து சென்ற ஆசிரியரை நாட்டு துப்பாக்கியால் 3 முறை சுட்டார்.
அதில், படுகாயமடைந்த ஆசிரியர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றினர். மேல் சிகிச்சைக்கு வேறு மருத்துவமனைக்கு ஆசிரியர் அனுப்பி வைக்கப்பட்டார்.
மாணவன் சுடுவதை பார்த்தவர்கள், அவனை பிடிக்க முயன்றனர். ஆசிரியரும் பிடிக்க முயற்சி செய்தார். ஆனால், அவரை தாக்கிவிட்டு நழுவி சென்றான். இருப்பினும் மற்றவர்கள் அந்த மாணவனை பிடித்து சராமரி அடி கொடுத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.