ஆபத்தை உணர்ந்து – பெங்களூருவில் கட்டாயமாக்கப்படும் முகக்கவசம்!
கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் வைரஸ் பரவல் வேகம் எடுத்து உள்ளது. தினசரி பாதிப்பில் பெங்களூருவில் தான் அதிக பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முககவசம் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ஹரீஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பெங்களூருவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வணிக வளாகங்கள் உள்பட பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது இன்று (அதாவது நேற்று) கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பொது இடங்களில் முகக்கவசம் அணிவது குறித்து மார்ஷல்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.
பெங்களூருவில் தற்போது தினமும் 16 ஆயிரம் சோதனைகளை நடத்தி வருகிறோம். அதை 20 ஆயிரமாக உயர்த்த முடிவு செய்து உள்ளோம். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
222 பேர் பாதிப்பு இந்த நிலையில் கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- கர்நாடகத்தில் நேற்று 11 ஆயிரத்து 962 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக 230 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூருவில் மட்டும் 222 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கோலாரில் 3 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 5 மாவட்டங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது.
23 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. இதுவரை 39 லட்சத்து 53 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை. நேற்று 203 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். 39 லட்சத்து 11 ஆயிரத்து 40 பேர் இதுவரை குணம் அடைந்து உள்ளனர். 2,441 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.