இரவு 8 மணிக்கு மேல் இப்படி செய்தால்…குழந்தை பிறப்பு விகிதம் குறையும்-அமைச்சரின் கருத்தால் வெடித்த சர்ச்சை
இரவு 8 மணிக்கு வணிக சந்தைகள் மூடப்படும் இடங்களில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கோஜா முஹம்மது ஆசிப் தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரின் கருத்தால் வெடித்த சர்ச்சை
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கோஜா முஹம்மது ஆசிப், இஸ்லாமாபாத் நகரில் செய்தியாளர்களை சந்திப்பில் கலந்து கொண்டு இருந்த போது, இரவு 8 மணிக்கு வணிக சந்தைகள் மூடப்படும் இடங்களில் குழந்தை பிறப்பு விகிதம் மிக குறைவாக இருப்பதாக பேசி இருந்தது தற்போது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் இந்த கருத்தை இணையவாசிகள் பயங்கரமாக கேலி செய்து வருவதுடன் சமூக ஊடகங்களில் ஆர்வமாக பகிர்ந்தும் வருகின்றனர்.
ட்விட்டர் பயனர் ஒருவர் இது தொடர்பாக பதிவிட்டுள்ள பதிவில், புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்பு, இரவு 8 மணிக்கு மேல் குழந்தைகளை உருவாக்க முடியாது, இரவு 8 மணிக்கு வணிக சந்தைகள் அடைக்கப்படும் நாடுகளில் மக்கள் தொகை அதிகரிப்பு இல்லை, என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரை கிண்டல் செய்து குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 60 பில்லியன் சேமிப்பு
நாட்டின் ஆற்றல் சேமிப்பு திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்கு அமைச்சர் ஆசிப் பேசிய போது இந்த சர்ச்சைக்குரிய கருத்து வெளிவந்துள்ளது.
அத்துடன் இந்த செய்தி மாநாட்டில், திருமண மண்டபங்கள் இரவு 10க்கும், வணிக சந்தைகள் இரவு 8:30 மணிக்கும் மூடப்பட வேண்டும், இது நாட்டின் 60 மில்லியன் பணத்தை சேமிக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும், அவை நாட்டின் எண்ணெய் இறக்குமதி செலவை குறைக்க உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
“ஆற்றல் சேமிப்பு திட்டமானது உடனடியாக அமுல்படுத்தப்படும் என்றும், இதை அமைச்சரவை கண்காணிக்கும் என்றும்” பாதுகாப்பு அமைச்சர் கோஜா முஹம்மது ஆசிப் குறிப்பிட்டுள்ளார்.