ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கில் டெபாசிட் தொகையை பெற எவ்வளவு வாக்குகளை பெற வேண்டும்.. அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் டெபாசிட் பெற்றுவிட்டதா என்று இந்த செய்தியில் பார்க்கலாம். ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஈவெரா திருமகன். இவர் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஆவார். உடல்நிலை மோசமான நிலையில் ஈவெரா திருமகன் கடந்த ஜனவரி 4ம் தேதி மரணம் அடைந்தார்.
இதனால் இங்கு இடைத்தேர்தல் நடந்தது. இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு அதிமுக தற்போது ஈரோடு கிழக்கில் படுதோல்வி அடையும் நிலையில் உள்ளது.
ஈரோடு கிழக்கில் இதுவரை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 83528 வாக்குகளை கடந்து முன்னிலை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 32360 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சி 5117 வாக்குகளை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. தேமுதிக வெறும் 1017 வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது. இதனால் திமுக தரப்பு பிரம்மாண்ட வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே அதிமுக படுதோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 9 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் வென்றது. தற்போது 50 – 60 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெல்லும் சூழ்நிலையில் திமுக – காங்கிரஸ் கூட்டணி உள்ளது. சமயத்தில் 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஈரோடு கிழக்கில் இதுவரை 3 சட்டசபை தேர்தல்கள் நடந்து உள்ளன. அந்த 3 சட்டசபை தேர்தல்களில் வென்ற வாக்கு வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரோடு கிழக்கில் கடந்த முறை நடந்த தேர்தலில் காங்கிரஸ் – திருமகன் ஈவெரா- 67,300 வாக்குகள் – 44.27 வாக்கு சதவிகிதம் பெற்றார். தமிழ் மாநில காங்கிரஸ் – யுவராஜா எம்.- 58,396 வாக்குகள் – 38.41 வாக்கு சதவிகிதம் பெற்றார். நாம் தமிழர் – கோமதி – 11,629 வாக்குகள் – 7.65 வாக்கு சதவிகிதம் பெற்றார். மக்கள் நீதி மய்யம் – ராஜ் குமார் – 10,005 வாக்குகள் – 6.58 வாக்கு சதவிகிதம் பெற்றார். ஆனால் இந்த முறை அந்த வாக்குகளை கூட அதிமுக பெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. அதாவது 50 ஆயிரம் வாக்குகளை அதிமுக தரப்பு தாண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த முறை 38 சதவிகிதம் வாக்குகளை வென்ற அதிமுக இந்த முறை 30ஐ தொடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக மிகப்பெரிய சரிவை சந்தித்து உள்ளது. ஒற்றை தலைமைக்கு கீழ் போட்டியிட்டும் கூட கே எஸ் தென்னரசு மிகப்பெரிய சரிவை நோக்கி சென்றுகொண்டு இருக்கிறார்.
இங்கே மொத்தம் 77 பேர் போட்டியிட்டனர். தேர்தலில் . மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது. இங்கே இடைத்தேர்தலில் டெபாசிட் பெற வேண்டும் என்றால் 28 ஆயிரம் வாக்குகளை பெற்று இருக்க வேண்டும். 168000 வாக்குகள் இங்கே பதிவானது. பதிவான வாக்குகளில் 6-ல் 1 பங்கு வாக்குகள் பெற்றால் டெபாசிட்டை தக்க வைத்துக்கொள்ளலாம். அதாவது இடைத்தேர்தலில் டெபாசிட் பெற வேண்டும் என்றால் 28 ஆயிரம் வாக்குகளை பெற்று இருக்க வேண்டும். இதன் மூலம் இங்கே அதிமுக டெபாசிட்டை தக்க வைக்கிறது. ஆனால் தேமுதிக, நாம் தமிழர் இரண்டும் டெபாசிட்டை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளது. கடந்த முறை 11 ஆயிரம் வாக்குகள் வென்ற நாம் தமிழர் இந்த முறை 10 ஆயிரம் வாக்குகளை தொடுவதே சந்தேகம் ஆகி உள்ளது.