“உக்ரைன் துறைமுக தாக்குதலுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை” – ரஷ்யா!
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரானது இன்றுடன் 5 மாதங்களை எட்டியுள்ளது. கடந்த பெப்ரவரி 24ம் திகதி இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடங்கப்பட்டது. இந்நிலையில், துருக்கி பாதுகாப்பு மந்திரி ஹுலுசாய் அகார் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், ரஷ்யாவுடன் நாங்கள் தொடர்பு கொண்டபோது, அவர்கள் உக்ரைன் துறைமுக தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தனர்.
இந்த விவகாரம் பற்றி விரிவாகவும் மற்றும் தீவிர விசாரணை செய்தும் வருகிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துறைமுகங்களை தானிய ஏற்றுமதிக்காக திறப்பது பற்றிய ஒப்பந்தம் மேற்கொண்ட பின்னர் தாக்குதல் நடந்துள்ளது என்பது உண்மையில் எங்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என அகார் தெரிவித்து உள்ளார்.
இந்த தாக்குதல் பற்றி ஒடேசா ராணுவ நிர்வாகத்தின் செய்தி தொடர்பாளர் செர்ஹை பிராட்சக் கூறும்போது, இரண்டு ஏவுகணைகள் துறைமுக உட்கட்டமைப்பு மீது மோதி தாக்குதல் ஏற்படுத்தின. 2 ஏவுகணைகள், உக்ரைனின் வான்வழி பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என கூறியுள்ளார்.
ஒடேசா பகுதியில் 6 குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கான சத்தம் கேட்டது என உக்ரைனிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒலெக்சி கொன்சாரென்கோ கூறினார்.