எவ்வளவு சொல்லியும் திருந்தல.. சூப்பர் ஸ்டார் மனதை வேண்டுமென்றே நோகடிக்கிறாரா ப்ளூ சட்டை மாறன்?

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ஒருவர்தான். அன்றும் இன்றும் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் அது ரஜினிகாந்த் தான். இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். இந்தப் படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. மேலும், இது மட்டும் இல்லாமல் தற்போது கூலி படத்தில் நடித்து வருகின்றார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து பிரபல சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்க பதிவில் கலாய்த்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
வழக்கமாகவே தமிழ் சினிமாக்களை கலாய்த்துக் கொண்டு விமர்சனம் செய்யும் ப்ளூ சட்டை மாறன், சூப்பர் ஸ்டார் படம் என்றால், எக்ஸ்ட்ரா எனர்ஜியுடன் கலாய்த்து விமர்சனம் செய்வார். அவரது நடிப்பில் வெளியான ஜெய்லர் மற்றும் லால் சலாம் படங்களை மிகவும் பங்கமாக கலாய்த்து தள்ளியிருந்தார். இந்நிலையில் நேற்று அதாவது ஆகஸ்ட் 24ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அமைச்சர் ஏ.வ. வேலு எழுதிய காவியத் தலைவன் என்ற புத்த வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல விஷயங்களைப் பேசினார். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது.
கலைஞர்: அதில், “ கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை அனைவருக்கும் தெரியும். அண்மையில் அவரது நினைவாக 100 ரூபாய் நாணயம் வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அரைமணி நேரம் பேசினார். ராஜ்நாத் சிங்கின் பேச்சு என்பது அவராக பேசியது இல்லை. பாஜக மேலிடத்து உத்தரவு. அனைவராலி, பாராட்டப்பட்ட அபூர்வமான மனிதர்தான் கலைஞர் கருணாநிதி. ஒரு சிலர் தான் சமூகத்துக்கு, இனத்துக்காக, மக்களுக்காக போராடுவார்கள். அப்படிப்பட்டவர்களில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி முக்கியமானவர். அவர் எதிர்கொண்ட சோதனைகள், விமர்சனங்களை வேறு யாராவது எதிர்கொண்டிருந்தால், அவர்கள் எப்போதோ காணாமல் போயிருப்பார்கள்.
விமர்சனங்கள்: விமர்சனங்கள் என்பது தேவைதான். ஆனால் விமர்சனங்கள் மழை போல இருக்க வேண்டுமே தவிர புயல் போல இருக்கக் கூடாது. புயல் போல விமர்சனங்கள் இருந்தால் மரங்களே சாய்ந்துவிடும். ஆனால் எத்தனை புயல் அடித்தாலும் சாயாமல் நின்ற ஆலமரம் கருணாநிதி. அந்த ஆலமரத்தின் வேர் (உடன்பிறப்புகள்) மிகவும் வலுவானது. வேர் வலிமையாக இல்லாவிட்டால், 12 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதநிலையிலும் கூட கட்சியை காப்பாற்றியவர் கலைஞர். ஐந்து வருடம் ஆட்சியில் இல்லாவிட்டாலே கட்சியைக் காப்பாற்ற திண்டாடுகிறார்கள். கருணாநிதி இறந்த பிறகு அவரது புகழ் வளர்ந்து கொண்டே உள்ளனர். கலைஞர் கருணாநிதி குறித்து படம் எடுக்க வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். எனவே விமர்சனம் செய்யுங்கள். ஆனால், யார் மனதையும் நோகடிக்காதீர்கள்” என பேசினார்.
ப்ளூ சட்டை: இந்தப் பேச்சு, கலைஞர் கருணாநிதிக்கு மட்டும் இல்லாமல் தன்னை விமர்சிக்கும் பலரையும் மனதில் வைத்துத்தான் ரஜினிகாந்த் பேசியதாக சலசலப்பு இருந்துவந்த நிலையில், ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் தளத்தில் ரஜினியைக் கலாய்த்து, பதிவிட்டுள்ளார். அதில், “ தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த அரசியலுக்கு வரப்போறதா சொன்னாரு. கடைசில…ஓய்வு தேவைப்படுது. டாக்டர்கள் சொன்னதை கேட்டாகனும். அதனால கட்சி கேன்சல்னு அறிவிச்சாரு. இப்ப என்னடான்னா.. ஓய்வே இல்லாம ஆக்சன் படங்களா நடிச்சி தள்ளிட்டு இருக்காரே…!!” என அவரது பெயரைக் குறிப்பிடாமல் கலாய்த்துள்ளார். ஆனால் ப்ளூ சட்டை மாறனின் இந்த பதிவு நேற்று ரஜினி கூறியதை மனதில் வைத்து வேண்டுமென்றே போடப்பட்டுள்ளதாக பலர் பேசி வருகின்றனர்.