காதலியை கொன்று ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு அடுத்த திருமணத்திற்கு தயாரான காதலன்!
இந்திய தலைநகர் டெல்லியில் காதலியை கொலை செய்துவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்த நபர் கைதான நிலையில், மேலும் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லியின் மித்ரான் கிராமத்தில் வசிக்கும் சாஹில் கெலாட் என்ற நபர், தனது காதலி நிக்கியை கொலை செய்துவிட்டு ஃப்ரிட்ஜில் அடைத்து வைத்தார்.
மேலும் அவர் வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயம் செய்துள்ளார். அதன் பின்னர் கொலை சம்பவம் குறித்து அறிந்த பொலிஸார் சாஹிலை கைது செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது சாஹிலுக்கு உதவியதாக அவரது தந்தை வீரேந்தர் சிங், ஆஷிஷ், நவீன் ஆகிய உறவினர்களும், அமர் மற்றும் லோகேஷ் என்ற நண்பர்களும் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 3 நாட்கள் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தீவிர விசாரணைக்கு பின்னரே அவர்களுக்கு கொலையில் பங்கு உள்ளது என்பதை உறுதி செய்த பின் பொலிஸார் கைது நடவடிக்கை எடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் நிக்கியின் செல்போனை பொலிஸார் மீட்டுள்ளனர். ஆனால் அதில் இருந்த அனைத்து தரவுகளையும் நீக்கிய சாஹில், தனக்கு எதிரான சான்றாக அது அமையும் என கருதி சிம் கார்டையும் எடுத்துள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது.