குழந்தைகளுக்கு லுஞ்சுக்கு உருளைக்கிழங்கு சாதம் இப்படி செஞ்சி கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க …!!
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு – 2
வெங்காயம் – 1
வேர்க்கடலை – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
சாதம் – ஒரு கப்
இஞ்சி – பூண்டு – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
தனியா – ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
கடலைப் பருப்பு, உளுந்து
– தலா ஒரு டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் கடுகு, கறிவேப்பிலையைப் போட்டுத் தாளியுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து சேர்த்து வதக்குங்கள். இஞ்சி – பூண்டு, பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பைச் சேருங்கள். உருளைக் கிழங்கை நீளவாக்கில் நறுக்கிச் சேர்த்துக் கிளறி, எண்ணெய்யிலேயே வேகவிடுங்கள். மஞ்சள் தூளைச் சேருங்கள். உருளைக் கிழங்கு பாதி வெந்ததும் அடுப்பை சிம்மில் வையுங்கள்.
வெறும் வாணலியில் தனியா, மிளகாய், கடலைப் பருப்பு, உளுந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து ஆறவையுங்கள். இவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எடுத்து உருளைக் கிழங்கு கலவையில் சேருங்கள். பொடியும் கிழங்கும் நன்றாகக் கலந்ததும் கறிவேப்பிலையைச் சேர்த்துக் கிளறுங்கள். ஆறவைத்திருக்கும் சாதத்தை இந்தக் கலவையில் கொட்டிக் கிளறுங்கள். விரும்பினால் வறுத்த வேர்க்கடலையைச் சாதத்தில் சேர்த்துப் பரிமாறலாம்.