குவைத்தில் ஒட்டகம் மேய்க்க மறுத்த தமிழரை,சுட்டு கொன்ற கொடூரம்… தவிக்கும் மனைவி மகள்கள் …

September 13, 2022 at 3:58 pm
pc

குவைத்துக்கு செல்வதற்காக ஒருவரிடம் முத்துகுமரன் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். கடந்த 3-ந் தேதி அவர் ஐதராபாத் நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார்.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா லட்சுமண்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து குமரன். பி.பார்ம் படித்துள்ள இவருக்கு வித்யா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். 

30 வயதான முத்துகுமரன் கொரோனா காலத்தில் வேலை இழந்து வாழ்வாதாரத்தை பறி கொடுத்தார். இதனால் காய்கறி வியாபாரம் செய்யத் தொடங்கினார். ஆனால் அதிலும் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்கவில்லை. இதனால் 2 மகன்களையும் படிக்க வைப்பதற்கு அவர் திணற நேரிட்டது. 

இதையடுத்து வெளிநாடு சென்று பணிபுரிவதற்கு அவர் முடிவு செய்தார். வெளிநாட்டுக்கு ஆட்கள் அனுப்பும் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மூலம் குவைத்துக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. குவைத்துக்கு செல்வதற்காக ஒருவரிடம் முத்துகுமரன் 1.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். 

கடந்த 3-ந் தேதி அவர் ஐதராபாத் நிறுவனம் மூலம் குவைத்துக்கு சென்றார். 4, 5, 6-ந் தேதிகளில் அவர் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் தனக்கு குவைத் வேலை பிடிக்கவில்லை. ஊர் திரும்பிவிடலாமா? என்று யோசிக்கிறேன் என்று மனைவி வித்யாவிடம் வருத்தப்பட்டு பேசினார்.

இந்த நிலையில் 7-ந்தேதி முதல் அவரது தொலைபேசி தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவருடன் பேச முடியாமல் அவரது மனைவி தவித்தபடி இருந்தார். இதற்கிடையே கடந்த 9-ந் தேதி குவைத்தில் முத்துகுமரன் மரணமடைந்து விட்டதாக இடிபோன்ற ஒரு செய்தி வித்யாவுக்கு வந்தது. இதனால் வித்யாவும், அவரது குடும்பத்தினரும் நிலை குலைந்து போனார்கள். 

கணவர் முத்துகுமரன் எப்படி மரணமடைந்தார். என்ன நடந்தது? என்பது தெரியாமல் தவிப்புக்குள்ளானார் வித்யா. ஐதராபாத் நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது அவர்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. அதுபோல அரசு தரப்பு மூலம் முயற்சி செய்தபோதும் அதற்கு பலன் ஏற்படவில்லை. 

இதனால் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் வித்யா கதறி புலம்பியபடி உள்ளார். இந்த நிலையில் குவைத்தில் முத்துகுமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. குவைத்துக்கு சென்ற முத்துகுமரன் அங்குள்ள சபா அல்அகமது சிட்டி என்ற பகுதியில் ஒருவரிடம் பணிக்கு சேர்த்து விடப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இருந்து அவரை அழைத்து செல்லும் போது பெரிய நிறுவனம் ஒன்றில் குமாஸ்தா வேலை வாங்கி தருவதாகத்தான் அழைத்து சென்றனர். குமாஸ்தா வேலை கிடைக்காத பட்சத்தில் வீட்டில் உள்ள சிறு சிறு பணிகளை செய்யும் உதவியாளராகவும் சேர்த்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. 

ஆனால் குவைத்தில் அவருக்கு குமாஸ்தா வேலையோ அல்லது இதர உதவியாளர் வேலையோ எதுவும் வழங்கப்படவில்லை. மாறாக முத்துகுமரனை அந்த பகுதியில் உள்ள பணக்காரர் ஒட்டகம் மேய்க்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. 

ஆனால் ஒட்டகம் மேய்ப்பதற்கு முத்துகுமரன் மறுத்துவிட்டார். இதனால் அவருக்கும், அவரது முதலாளிக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டது. இதையடுத்து முத்துகுமரன் குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் அந்த குவைத் முதலாளிக்கு கூடுதல் ஆத்திரம் ஏற்பட்டது. அவர் முத்துகுமரனை அடித்து, உதைத்து சித்ரவதை செய்துள்ளார்.

முத்துகுமரன் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அந்த நபர் சுட்டுக்கொன்றதாக தெரிய வந்துள்ளது. குவைத்தில் இருந்து வெளியாகும் ஐமன் மேட் நியூஸ் என்ற பத்திரிகையில் 24 வயது குவைத் பிரமுகர் 30 வயது இந்திய தொழிலாளியை சுட்டுக் கொன்றுள்ளார் என்று செய்தி வெளியானது. 

முதலில் முத்துகுமரன் பற்றிய தகவல் தெரியாமல் இருந்தது. ஆனால் அந்த செய்தியில் சபா அல்அகமது பாலைவன பகுதியில் துப்பாக்கி சூடு நடந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது. ஏர் ரைபிள் மூலம் இந்திய தொழிலாளி சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார் என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

குவைத் விசாரணை குழுவினர். தீவிர விசாரணை நடத்தியபிறகு தான் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது தமிழகத்தை சேர்ந்த முத்துகுமரன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணனிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர் கூறியதாவது:- முத்துகுமரனின் மனைவி வித்யா எனக்கு மனு கொடுத்துள்ளார். அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரிய அதிகாரிகளுக்கு நான் அந்த மனுவை அனுப்பி இருக்கிறேன். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website