கை கழுவுவதால் இத்தனை நோய்களை தடுக்க முடியுமா?

November 27, 2023 at 7:52 pm
pc

பொதுவாகவே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறந்த உணவுப்பழக்கம் எந்தளவு முக்கியத்துவம் வகிக்கின்றதோ இதே அளவு தூய்மையும் முக்கிய இடம் வகிக்கின்றது. நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளது போல் எல்லாவற்றையும் விட சிறந்த செல்வம் நோய் இல்லாமல் இருப்பதே ஆகும். பல்வேறு நோய் தொற்றுக்களை தடுக்க நமது கைகளை கழுவினாலே போதும் என்கின்றனர் வைத்திய நிபுணர்கள், இது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கியத்துவம் பெறுகின்றது கைகழுவும் பழக்கம். நமது உடல் உறுப்புக்களில் ஒன்றான கை நமது சிறந்த நண்பனாகும்.சரியான முறையில் பராமரிக்காவிடில் நமது கைகளே நமக்கு எமனாக மாறிவிடும்.

கையே உடலில் பல்வேறு தொற்று நோய்களைத் தோற்றுவிக்கும் பல கோடிக்கணக்கான பக்டீரியா, வைரஸ், பங்கஸ் போன்ற நுண் கிருமிகள் எமது உடலுக்குள் சென்றடையத் துணை செய்கிறது என்றால் நம்ப முடிகின்றதா? கை ஊடாக இவை உடலினுள் சென்று பல்வேறு பாரதூரமான நோய்களைத் தோற்றுவிக்கின்றன.

பல்வேறு தொற்று நோய்கள் தாக்க எமது கையும் காரணமாகவிருக்கிறது. அடிக்கடி சவர்க்காரம் கொண்டு சுத்தமான நீரினால் கைகளைக் கழுவுதல் பல்வேறு தொற்று நோய்கள் எம்மைத் தாக்காது பாதுகாக்க உதவும்.

அடிக்கடி கைகளை கழுவுதல் உடலை நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க மிகவும் எளிமையானதும் குறைந்த செலவில் செய்யக்கூடியதுமான ஒரு சிறந்த வழிமுறையாக இருக்கும். அடிக்கடி கை கழுவுதல் தொற்று நோய்கள் பரவுதலையும் தடுக்க உதவும்.

கை கழுவச் சில வினாடிகளே தேவைப்படும். கைகள் அழுக்காக இருந்தால் பல வகையான தொற்றுகள் பரவும், அதனால் கை சுகாதாரம் மிகவும் அவசியம் என்கின்றனர் வைத்தியர்கள்.

குறைந்தது 30 வினாடிகளுக்கு சோப்பு போட்டு கைகளை கழுவுவது சிறந்தது, இதன் காரணமாக காலரா, வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு, வயிற்றுப் புழுக்கள், நிமோனியா, கோவிட் போன்ற பல நோய் அபாயத்தை 90 சதவீதம் குறைத்துக்கொள்ளலாம்.

வயிற்றுப்போக்கு மற்றும் குடல் நோய்த்தொற்றுகளுக்கு அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற உணவுகள் மிகப்பெரிய காரணம் என்று நிபுணர்கள் அடிக்கடி கைகளை கழுவுவது இதற்கு சிறந்த தீர்வு கொடுக்கும்.

அதனால் தான் உணவை அழுக்கான கைகளால் உண்ணக் கூடாது. கெட்ட உணவுகளை சாப்பிட்டாலும் வயிறு சம்பந்தமான நோய்கள் வரும் அபாயம் உள்ளது. அசுத்தமான கைகளால் கண்களைத் தொடுவதே கண் தொற்றுக்கு முக்கியக் காரணம்.

அடிக்கடி கைகளை கழுவுவதால் கண்தொற்றுக்கான அபாயத்தை 90 சதவீதம் குறைக்கலாம். அசுத்தமான கைகளுடன் கண்ணை தொடுவதனால் கண் எரிச்சல், கண் சிவத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.எனவே கண்களைத் தொடும் முன் இதை மனதில் கொள்ளுங்கள்.

கடுமையான அரிப்பு அல்லது கண்களில் ஏதேனும் தூசு விழுந்தால் மென்மையான துணியைப் பயன்படுத்தி சுத்தம் செய்வது சிறந்தது. இருமல் அல்லது தும்மலுக்குப் பிறகு உடனடியாக உங்கள் கைகளை கழுவவும். இதைச் செய்யாவிட்டால், இந்தப் பிரச்சனைகள் மற்றவர்களுக்குப் பரவும்.

ஏனெனில் நீங்கள் தும்மிய பிறகு மற்றவர்களுடன் கைகுலுக்கினால் உங்கள் கைகளில் இருந்து மற்றவரின் கைகளுக்கு பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவும் வாய்ப்பு அதிகம்.

இவை அனைத்திலும் இருந்து உடலை பாதுகாக்க கைகளை கழுவுவது மிக சிறந்த தீர்வாக அமையும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உங்கள் கைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website