சக மாணவிகளின் அந்தரங்க வீடியோவை வெளியிட்ட மாணவி: வெடித்த போராட்டம்!
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவி ஒருவர், சக மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்த மாணவிகள் போராட்டத்தில் குதித்ததை தொடர்ந்து வீடியோ வெளியிட்ட மாணவியை போலீசார் கைது செய்தனர்.மொகாலி, பிரபல சண்டிகர் பல்கலைக்கழத்தில் பயிலும் மாணவர்கள் மத்தியில், இளம்பெண்கள் குளிக்கும் வீடியோ மற்றும் சில வீடியோக்கள் வைரலாக பரவின.
இந்த வீடியோக்கள், சண்டிகர் பல்கலைக்கழத்தில் உள்ள மாணவிகள் விடுதியில் எடுக்கப்பட்டவை என தெரியவந்தது. இதில், மாணவர்கள் யாரேனும் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில், எம்.பி.ஏ., முதலாமாண்டு படிக்கும் மாணவி ஒருவரே வீடியோ எடுத்து வெளியிட்டது தெரியவந்தது மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குளியலறையில் ரகசிய கேமரா வைத்து வீடியோக்களை எடுத்ததாக கூறப்படும் நிலையில், அந்த வீடியோக்கள் அனைத்தும் இணையதளத்திலும் கசிய விட்டதும் தெரியவந்துள்ளது. இதன் பின்னர் தான் மாணவர்கள் மத்தியில் அந்த வீடியோ பரவியது.
இதனையறிந்த அங்கு படிக்கும் மாணவிகள், பெற்றோர்கள் கடும் அதிர்ச்சியடைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்ட மாணவியை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில், அந்த மாணவி தனது செயலை ஒப்பு கொண்டுள்ளார். அந்த வீடியோவை, அவரது ஆண் நண்பருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து சில மாணவிகள் மொத்தமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், அதனை போலீசார் மற்றும் பல்கலை நிர்வாகம் மறுத்துவிட்டது. இது குறித்த வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனக்கூறியுள்ள போலீசார், ஒரு மாணவி மட்டும் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள மாநில அரசு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என கேட்டு கொண்டுள்ளது.தேசிய பெண்கள் கமிஷனும் இந்த விவகாரத்தில் கவனம் கொண்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி.,க்கு கடிதம் அனுப்பியதுடன், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உதவி செய்யும்படி அறிவுறுத்தி உள்ளது.