“நீங்க டாக்டர் இல்ல கடவுள்” …நோயாளிக்காக 3KM தூரம் ஓடிச்சென்ற மருத்துவர்! மனிதநேயத்திற்கு குவியும் பாராட்டுகள்
பெங்களூரில் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்ட மருத்துவர் ஒருவர் 3 கி.மீ தூரம் ஓடிச் சென்று அறுவை சிகிச்சை செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வாரம் பெய்த கனமழையால் பெங்களூரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் மருத்துவர் ஒருவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், 3 கி.மீ ஓடிச்சென்று மருத்துவமனைக்கு வந்து சேர்ந்துள்ளார்.
சர்ஜாபூரை கோவிந்த் நந்தகுமார் என்ற மருத்துவர், மணிப்பால் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் அறுவை சிகிச்சை செய்வதற்காக, சர்ஜாபூர் – மாரத்தஹள்ளி சாலையில் மருத்துவமனை நோக்கி காரில் சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது டிராபிக் காரணமாக மருத்துவமனை செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் 15 நிமிடத்திற்குள் மருத்துவமனை சென்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும்.
ஆனால் டிராபிக் சரியாகி செல்ல 1 மணிநேரம் ஆகும் என்பதால், சற்றும் யோசிக்காமல் மருத்துவமனையை நோக்கி ஓடியுள்ளார், சுமார் 20 நிமிடங்களில் மருத்துவமனையை சென்று அடைந்தார்.
இதுதொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பலரின் பாராட்டையும் பெற்றது.
மேலும் இதுதொடர்பாக டாக்டர் நந்தகுமார் கூறுகையில், “என்னுடைய நோயாளிகள் எனக்காக காத்திருக்கக்கூடாது. மேலும் அறுவை சிகிச்சை முடியும் வரை அவர்கள் சாப்பிடக்கூடாது என்பதால் வேகமாக ஓடிச் சென்று ஆபரேசன் செய்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.