பறிபோன பள்ளி மாணவி உயிர் – தண்டிக்கப்படுமா பள்ளி நிர்வாகம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் பள்ளி மாணவியின் மரணத்தினால் வன்முறை கட்டுக்கடங்காமல் சென்றதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சின்னசேலம் நயினார்பாளையத்தில் தனியார் பள்ளி மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, மாணவியின் குடும்பத்தார் மற்றும் பலர் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியது.
சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள், பள்ளி வளாகத்தில் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் பல பள்ளி பேருந்துகளை தீயிட்டு கொளுத்தினர்.
பொலிசார் பலரும் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக நயினார்பாளையத்தில் 31ஆம் திகதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பள்ளியில் நடந்த போராட்டம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.