பள்ளி மாணவி மர்ம மரணம்!போராட்டம் வன்முறையாக வெடித்த பரபரப்பு…

July 17, 2022 at 3:06 pm
pc

தமிழக மாவட்டம் கள்ளக்குறிச்சியில் 12ஆம் வகுப்பு மாணவி மரணமடைந்ததால் நடைபெற்று வரும் போராட்டம் வன்முறையாக வெடித்தது. 

கடலூர் மாவட்டம், பெரியநெசலூரைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரது 17 வயது மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி மாணவி விடுதியின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக, பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோருக்கு தகவல் அளித்தது.

மேலும், பள்ளிக்கு விரைந்த பொலிசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் மாணவியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க முயன்ற போது, அவர்கள் வாங்க மறுத்துவிட்டனர்.

தங்கள் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மாணவியின் இறப்பிற்கு முன்பே அவரது உடலில் காயங்கள் ஏற்பட்டதாகவும், உள்ளுறுப்புகளின் ரசாயன பகுப்பாய்வு அறிக்கை வெளியானால் தான் மாணவி எப்படி இறந்தார் என முழுமையாக தெரிய வரும் என்றும் கூறப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகரமானது. அரசு மருத்துவமனை முன்பு மாணவியின் குடும்பத்தாரும், சில கட்சியினரும் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பொலிசார் மீது அவர்கள் கற்கள், கண்ணாடி போத்தல், செருப்பு ஆகிய பொருட்களை வீசியதால் பதற்றம் உருவானது.

அத்துடன் பொலிசாரின் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டதால் போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

போராட்டக்காரர்களின் தாக்குதலால் காயமடைந்த பொலிசார் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.       

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website