பாஜக வந்தால் இது நடக்கும்: அதிமுக குற்றச்சாட்டு!
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ரூபாயாக உயரும் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். தமிழகத்திற்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 -ம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் எஸ்டிபிஐ வேட்பாளர் முகமது முபாரக்-ஐ ஆதரித்து திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
மேலும், தங்கத்தின் விலை உயர்வால் நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாத சூழ்நிலைக்கு உள்ளாகும். வேண்டுமானால் தங்கராசு, தங்கம், பவுன்தாய்’என்று பெயர் தான் வைக்க முடியும்.
இதனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சம் ரூபாயாக உயரும். அதை பாஜகவால் கட்டுப்படுத்த முடியாது” என்றார்.