புதைச்சு 10 நாளில் கிடைத்த தடயம்; உடல் தோண்டி சோதனை!

January 11, 2023 at 5:07 pm
pc

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை பட்டாப்புளி நடுத்தெருவை சேர்ந்த காளிதாஸ். இவரது மகன் சேகர் (55). இவர், கடந்த 10 தினங்களுக்கு முன்பு பெரியகுளம் வடகரை போக்குவரத்து பணிமனை முன்பாக உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சேகரின் உடலை மீட்டு நல்லடக்கம் செய்தனர். இந்நிலையில் சேகர் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது சகோதரி சாந்தி என்பவர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்ரே இடம் புகார் மனு கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்ரே உத்தரவின் பேரில் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி விசாரணை மேற்கொண்டு வந்தார். 

விசாரணையில் இரண்டு நபர்கள் சேர்ந்து சேகரை அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களை அழைத்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதனைத் தொடர்ந்து பெரியகுளம் வட்டாட்சியர் காதர் ஷெரிப், காவல் துணை கண்காணிப்பாளர் கீதா ஆகியோர்கள் முன்னிலையில் புதைக்கப்பட்ட சேகரின் உடலை தோண்டி உறவினர்கள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ரஞ்சித் தலைமையிலான மருத்துவக்குழு உடற்கூறு ஆய்வு செய்தனர்.

மேலும், இது தொடர்பாக பெரியகுளம் ஆய்வாளர் மீனாட்சி தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். உடற்கூறு ஆய்வு குறித்து மருத்துவ அறிக்கை வந்ததும் சேகரின் இறப்பு குறித்த அறிக்கையின் அடிப்படையில் காவல் துறை நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.

புதைக்கப்பட்ட ஒருவரது உடல் 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் தோண்டி எடுப்பட்டு பிரேத பரிசோதனை செய்தது பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: இறந்துபோன சேகர் நல்ல மனுஷன். அவருடைய சாவில் இவ்வளவு சந்தேகம் இருக்கும்னு யாருக்கும் தெரியாது. அவருடைய தங்கை சாந்திக்கு சந்தேகம் வந்ததால் அவர் புகார் கொடுத்ததை அடுத்து மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டபோது சேகர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு வந்து உள்ளது. இதன் அடிப்படையில் தான் தற்போது 10 நாட்களுக்கு பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் அறிக்கை முழுமையாக வந்த பிறகு தான் இறந்தது எப்படி? என்பது குறித்து தெரிய வரும். இவ்வாறு அந்த பகுதி பொதுமக்கள் கூறினர். இந்த சம்பவத்தால் தேனி மாவட்டத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website