ரிஷி சுனக் மனைவியின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியின் கைவசம் இந்தியாவின் தொழில் நுட்ப நிறுவனமான இன்ஃபோக்சிஸின் 3.89 கோடி பங்குகள் இருக்கின்றன. இதன் தோராய மதிப்பு 721 மில்லியன் அமெரிக்க டாலர், அதுவே இந்திய ரூபாயில் கணக்கிட்டால் 5,950 கோடி ரூபாய்.
இவ்வளவு சொத்துக்கும் சொந்தக்காரான அக்ஷதா மூர்த்தி யார்? தற்போதைய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கிற்கும், அக்ஷதா மூர்த்திக்கும் எவ்வாறு உறவு மலர்ந்தது என்பது போன்ற விளக்கங்கள் இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த அக்ஷதா மூர்த்தி?
அக்ஷதா மூர்த்தியின் பெற்றோர் அம்மா சுதா மூர்த்தி, அப்பா நாரயண மூர்த்தி ஆவார்கள், குடும்பத்தின் பொருளாதாரத்தை பெருக்கவும், தங்கள் பணியில் மேன்மை அடையவும் மும்பைக்கு குடியேறினர்.
ஆனால் அப்போது குடும்பத்தின் கடுமையான பொருளாதார நிலை காரணமாக அக்ஷதா தன் தாத்தா பாட்டியோடு கர்நாடகாவிலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பின் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை (MBA) படிக்க தொடங்கிய அக்ஷதா மூர்த்தி, அங்கு ரிஷி சுனக்கை சந்தித்து நட்பு கொண்டார், அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தொழில் மற்றும் வருமானம்:
கலிஃபோர்னியாவில் வாழ்கையைத் தொடங்கிய அக்ஷதா, 2011ஆம் ஆண்டு அக்ஷதா டிசைன்ஸ் என்கிற பெயரில் ஒரு ஃபேஷன் நிறுவனத்தைத் தொடங்கினார், ஆனால் அது நான்கு ஆண்டுகளில் சரிவை சந்தித்து முடங்கியது.
மேலும் அவர் தற்போது கட்டமரான் வெஞ்சர்ஸ், டிக்மீ ஃபிட்னஸ், நியூ & லிங்வுட் போன்ற சில நிறுவனங்களில் இயக்குநராக இருப்பதாக அவரது லிங்க்ட்-இன் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிறுவனர்களில் ஒருவரான நாராயண மூர்த்தியின் மகளான அக்ஷதா மூர்த்தி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.93 சதவீத பங்குகளை வைத்து இருப்பதாக டிஎன்ஏசெய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனிப்பட்ட பங்குகளின் அடிப்படையில் அக்ஷதா மூர்த்தியிடம் 3.89 கோடி பங்குகள் உள்ளன, இதன் தோராய மதிப்பு 721 மில்லியன் அமெரிக்க டாலர், அதுவே இந்திய ரூபாயில் கணக்கிட்டால் 5,950 கோடி ரூபாய் ஆகும்.
கடந்த 2021 – 22 நிதியாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் தன் பங்குதாரர்களுக்கு ஒற்றை பங்குக்கு 32.5 ரூபாய் ஈவுத்தொகையை வழங்கியதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி முகமை தெரிவித்து இருந்தது.
அதனடிப்படையில் அக்ஷயா மூர்த்தியிடம் உள்ள 3.89 கோடி பங்குகளை 32.5 ரூபாய் ஈவுத்தொகையுடன் பெருக்கினால், கடந்த 2021 – 22 நிதி ஆண்டில் மட்டும் சுமார் 126 கோடி ரூபாய் ஈவுத்தொகை வருமானத்தை அக்ஷயா மூர்த்தி பெற்றுள்ளார்.
சர்ச்சை:
பிரித்தானியாவில் வசித்து வரும் அக்ஷயா மூர்த்தி தற்போது வரை non-domiciled status என்பதிலேயே இருக்கிறார், இதனால் அவர் பிரித்தானியாவிற்கு வெளியே சேர்க்கும் வருமானத்திற்கு, பிரித்தானியாவில் வரி செலுத்த தேவையில்லை இல்லை, ஆனால் எதிர்கட்சியினர் மற்றும் இணையவெளியில் எழுந்த கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து, அவர் உலகளவில் சம்பாதிக்கும் அத்தனை வருமானத்திற்கும் பிரித்தானியாவில் வரி செலுத்தி வருகிறார்.