வெண்டிலேட்டர் சிகிச்சையில் விஜயகாந்த்: அதிர்ச்சியில் ரசிகர்கள்!
தேமுதிக தலைவர் விஜயாகாந்தின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் முதல் அறிக்கையை இன்று மதியம் வெளியிட்ட நிலையில், அடுத்த தகவல் வந்துள்ளது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், இருமல், சளி மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் கடந்த 18 -ம் திகதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (நவ.29) மதியம் மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது.
அவர் விரைவில் பூரண நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த சூழ்நிலையில் மியாட் மருத்துவமனையில் இருந்து அடுத்த தகவல் வந்துள்ளது. அந்த தகவலில், “தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெண்டிலேட்டர் சிகிச்சையில் உள்ளார்.
இதனால், விஜயகாந்துக்கு உள்ள சுவாச கோளாறுக்கு நிவாரணம் காணும் வகையில் டிராக்கியஸ்டமி மூலம் சிகிச்சை செய்வது குறித்து மருத்துவர் ஆலோசனை செய்து வருகிறார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.