2000 கோடியை தட்டி தூக்க போகும் ரஜினி, கமல்!

August 23, 2023 at 9:39 pm
pc

கடந்த வருடம் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த ஆண்டவருக்கு அப்படம் மிகப்பெரும் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து மீண்டும் பிஸியான கமல் இப்போது கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார்.

அதே போன்று சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் பல படங்களின் வசூல் சாதனையை முறியடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் சூப்பர் ஸ்டார் மீண்டும் புது தெம்புடன் வந்துள்ளதாக ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி உச்சத்தில் இருக்கும் இந்த இரண்டு நாயகர்களும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சுறுசுறுப்புடன் தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தற்போது ரஜினி, கமல் இருவரும் விக்ரம், ஜெயிலர் கொடுத்த தைரியத்தால் அதிரடி பிளான் ஒன்றை போட்டிருக்கிறார்களாம்.

அதாவது அவர்கள் இருவரும் பிரம்மாண்ட படத்தின் மூலம் இணைவதற்கு யோசித்து வருவதாக பிரபல இயக்குனர் பிரவீன் காந்தி தெரிவித்துள்ளார். ஆரம்பக் காலகட்டத்தில் பல படங்களில் இணைந்து நடித்த ரஜினி, கமல் இருவரும் ஒரு அந்தஸ்திற்கு வந்தவுடன் தனித்தனியாக புகழ்பெற்றனர்.

அந்த வகையில் தற்போது மீண்டும் அவர்கள் இணைய இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இது கிட்டத்தட்ட உறுதியான தகவல் தான் என்று கூறப்படுகிறது. அதிலும் இவர்கள் இருவரும் இணையும் படத்தில் அஜித் மற்றும் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிப்பார்கள் என்றும் பிரவீன் காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் யார் இயக்குனர், தயாரிப்பாளர் என்பதெல்லாம் தெரியவில்லை என்றும் அது பற்றி ரஜினி, கமல் ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இப்படத்தின் மூலம் 2000 கோடி வசூலை தட்டி தூக்கவும் அவர்கள் பிளான் போட்டிருக்கிறார்களாம். இது மட்டும் உறுதியாகும் பட்சத்தில் கோலிவுட் மிகப்பெரிய அளவில் கவனம் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website