தமிழகத்திற்கு அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி: ராதிகா சரத்குமார் புகழாரம்!
தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் மோடி என்று விருதுநகர் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் பாஜகவில் இணைத்த நிலையில், அவரது மனைவி ராதிகாவுக்கு விருதுநகர் மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது சரத்குமார் மற்றும் அவரது மனைவி வேட்பாளர் ராதிகா இருவரும், விருதுநகர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிவகாசியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ராதிகா, “இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கான சிறப்பான ஊழல் இல்லாத ஆட்சியை செய்து கொண்டிருக்கிறார். அவரை நாம் மீண்டும் பிரதமராக்கி அவரது கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
விருதுநகர் மக்களுக்கும், இந்திய அரசுக்கும் பாலமாக நான் இருப்பேன். தமிழ்நாட்டிற்கு அள்ளி அள்ளி கொடுத்தவர் பிரதமர் நரேந்திர மோடி. அதனை சிறப்பாக வழிநடத்தி செல்பவர் அண்ணாமலை.
திருமங்கலம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை 33 மாதங்களில் திறக்கப்படும். சிவகாசியில் கொண்டு வரப்பட்ட சீனப் பட்டாசுகள் தடை செய்யப்பட்டு பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது” என்றார்.