பிரித்தானிய இளவரசர்கள் ஹரி மற்றும் வில்லியம் கிட்டத்தட்ட 300,000 பவுண்டுகள் தொண்டு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தொகையானது இளவரசர் ஹரி முன்னெடுத்து நடத்தும் ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆராயுமாறு அறக்கட்டளைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. வில்லியம் மற்றும் கேட்டின் ராயல் பவுண்டேஷன் கடந்த ஆண்டு ஹரி மற்றும் மேகனின் இலாப நோக்கற்ற அமைப்பான சசெக்ஸ் ராயலுக்கு மொத்தம் 290,000 பவுண்டுகளுக்கான இரண்டு மானியங்களை வழங்கியது.
பின்னர், இளவரசர் ஹரி 75 சதவீத பங்குதாரராக உள்ள டிராவலிஸ்ட் என்ற தனியார் நிறுவனத்திற்கு இதில் 145,000 பவுண்டுகள் வழங்கப்பட்டது. இதனிடையே ஹரி மற்றும் மேகன் தம்பதி பிரித்தானிய அரச கடமைகளை விட்டுக்கொடுத்ததால் சசெக்ஸ் ராயல் என்ற அறக்கட்டளை மூட வேண்டியிருந்தபோது, அதன் நிதிகள் அனைத்தும் டிராவலிஸ்டுக்கு மாற்றப்பட்டன.
இளவரசர் வில்லியம் மற்றும் ஹரியின் இச்செயல் தொண்டு நிறுவனங்களுக்கான சட்டத்தை மீறுவதாகும் என குற்றஞ்சாட்டியுள்ள கிரஹாம் ஸ்மித் என்பவர், இளவரசர் ஹரிக்கு மறைமுகமாக உதவும் வகையில் இளவரசர் வில்லியம் செயல்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் உரிய முறையில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், ஹரியின் தனிப்பட்ட நிறுவனத்திற்கு நிதி அளித்தது மூலம் ராயல் அறக்கட்டளை கிட்டத்தட்ட, 300,000 பவுண்டுகளை இழந்துள்ளது என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மட்டுமின்றி, பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து ஹரி விலகி இருப்பதால், அவரது சொந்த தொண்டு நிறுவனங்களும் தற்போது மூடப்பட்டு வருகிறது,
மேலும் அவர் தொண்டு நிறுவனத்தின் பணத்தை தமது தனிப்பட்ட நிறுவனங்களுக்கு அளிப்பதன் வாயிலாக, அதை அவருடன் எடுத்துச் செல்வதாகத் தெரிகிறது என்கிறார் கிரஹாம் ஸ்மித். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளித்துள்ள இளவரசர் வில்லியம் மற்றும் கேட்டின் ராயல் அறக்கட்டளை, சசெக்ஸ் ராயலுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் அனைத்தும் அந்த தொண்டு நிறுவன பணிகளுக்கு உதவுவதற்காகவே என குறிப்பிட்டுள்ளது.